ஒரு கை பார்த்துவிடாலாம்.. சசிகலா வருகையால் ஒன்றுபட்ட இபிஎஸ் -ஓபிஎஸ்.. இனிதான் இருக்கு ட்விஸ்ட்!
சென்னை: சசிகலா வருவதற்கு முன்பு வரை எலியும் பூனையுமாக இருந்த ஓபிஎஸ், இபிஎஸ், அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அண்ணன் தம்பிகள் போல் மிகவும் நெருக்கமாக மாறி விட்டார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் சொல்லிக்கொள்கிறார்கள்.
அண்மைக்காலமாக சமீபகால அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வறு அணுமானங்கள், ஊகங்களில், கணிப்புகளில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். என்ன சொல்ல வருகிறோம் என்கிறீர்களா..நீங்கள் ஊடகங்களில் அண்மைக்காலமாக பார்த்திருப்பீர்கள், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையே அவ்வளவாக ஒற்றுமை இல்லை என்றும், சசிகலா பக்கம் ஓபிஎஸ் திரும்பி விடுவார் என்றும் ஊகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில இருந்த ஓபிஎஸ், சசிகலா பக்கம் போக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் முதல்வர், டிடிவி துணை முதல்வர்,சசிகலா பொதுச்செயலாளர் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் வதந்திகள் பரவின. அந்த பரபரப்பு நெருப்புக்கு பஞ்சை அள்ளிப்போடும் வகையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சசிகலா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் பதிவிட்டதால் காட்டுத்தீ போல், அதிமுக குறித்து தகவல்கள் பறக்க தொடங்கின.
ஜெ. நினைவிடம் மூடல்... சசிகலா வசம் இருக்கும் ஒரே டார்கெட் அதிமுக தலைமை அலுவலகம் மட்டும்?
ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்
ஆனால் உண்மையில் நிலைமை எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. நினைத்தது போல் சசிகலா உடன் ஓபிஎஸ் போவார் என்று பரவியது எல்லாமே வதந்தி என்பது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஜெயலலிதா சமாதி திறப்பில் இருவரும் ஒற்றுமையாக இருந்து திறந்து வைத்தார்கள். இதேபோல் மதுரையில் ஜெயலலிதா- எம்ஜிஆர் கோயிலை திறப்பதிலும் ஒற்றுமையாக சென்று திரும்பி வந்தார்கள். முன்பு போல் ஒபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என்று போஸ்டர்களில் புகைப்பட புறக்கணிப்புகள் இருப்பது இல்லை.
சசிகலாவிடம் போகக்கூடாது
சசிகலா வருகையை பாராட்டி போஸ்டர் ஓட்டிய முக்கிய நிர்வாகிகளை நீக்குவது என்பதில் இருவரும் உறுதியாக உள்ளது தெரிகிறது. இது ஒருபுறம் எனில் பிரச்சாரங்களில் முதல்வர் இபிஎஸ் படத்திற்கு எந்த அளவுக்குமுக்கியத்துவம் கொடுக்கப்படுமோ அதே அளவு ஓபிஎஸ்க்கும் கொடுக்கப்படுகிறது. சசிகலா மற்றும் தினகரனிடம் அதிமுகவை கொடுத்துவிடக்கூடாது என்பதில் இருவரும் திடமான உறுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
உரிமை இல்லை
பொதுவாக கட்சி குறித்து கொள்கை ரீதியான விஷங்களை அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே பேசி வருகிறார். இந்த கருத்தை அதிமுகவின் கருத்தாக பார்க்கலாம். ஏனெனில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே நல்ல நட்பில் உள்ளவர் ஜெயக்குமார். அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வந்த போது அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.
கொம்பனாலும் முடியாது
மேலும் மன்னிப்பு கோரினால் தினகரனை கட்சியில் சேர்ப்பது பற்றி தலைமை பரிசீலிக்கும் என்று கூறிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமியின் கருத்தும் கட்சியின் கருத்து அல்ல என்று ஜெயக்குமார் கூறினார். அத்துடன் அதிமுக மற்றும் எங்கள் சின்னத்தை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று தெரிவித்தார். ஜெயக்குமார் கருத்திலேயே எடப்பாடியும், ஒபிஎஸ்சும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு கை பார்ப்போம்
சசிகலாவை சேர்க்கக்கூடாது, என்ன நடந்தாலும் ஒரு கைபார்த்துவிடலாம் என்ற முடிவுடன் இருவரும் முன்பை விட அதிக அளவு ஒன்றுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் தான் ஓபிஎஸ். தினகரனையும், சசிகலாவையும் கட்சியில் இருந்துநீக்கியவர் இபிஎஸ் இருவருமே நிச்சயமாக மீண்டும் சசிகலாவை ஏற்பதற்கு தயாராக இல்லையாம். பழையபடி கட்சியை சசிகலாவிடம் கொண்டுபோய்விடக்கூடாது என்பதற்காக ஒன்றுபட்டுள்ளார்களாம். இதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
டெல்லி மேலிடம்
இருவரும் முன்பை விட அதிகமாக அடிக்கடி பேசி முடிவுகளை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சசிகலாவின் வருகை ஒபிஎஸ் இபிஎஸ் இடையே ஒற்றுமையை அதிகரித்துவிட்டது என்பதே உண்மை என்கிறார்கள் அதிமுக மேல்மட்ட விவகாரம் அறிந்தவர்கள். டெல்லி மேலிடமும் இபிஎஸ்ஐ முதல்வராக அங்கீகரித்து இருப்பதால் இனி வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது,.பொறுத்திருந்து பார்ப்போம் இனி நடக்கப்போவதை..!