“ஹேப்பி மோடில்” ஓபிஎஸ்.. கிண்டியிலிருந்து கால்! இனிதான் தரமான சம்பவம் - அதிமுக மாஜி கொடுத்த “க்ளூ”
சென்னை: கிண்டியில் இருந்து வந்த கால் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக இருக்கிறார் என்று சில முக்கிய குறிப்புகளுடன் ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கிறார் அதிமுகவின் முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டி தொடர்ந்து வருகிறது. இதனால் கடந்த 6 மாதங்களாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
பன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னு
இழந்த பதவி
நீதிமன்ற உத்தரவால் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை இழந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
மீண்டும் பதவி
இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி கிடைத்தது. இதனை அடுத்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக அந்த பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி வேகமாக காய்களை நகர்த்தினார்.
ஓபிஎஸ் மேல்முறையீடு
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தாக்கல் செய்த பதில் மனுவில் ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யக்கோரினார்.
வேகமெடுக்கும் ஓபிஎஸ்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்பிக்கையோடு கட்சிப்பணியை செய்து வருகிறார்கள். டெல்லியின் ஆதரவு தனக்கே இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.
அஸ்பயர் சுவாமிநாதன்
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் அதிமுக உட்கட்சிப்பூசல் தொடர்பாக அடுத்தடுத்து பதிவுகளை குறிப்பால் வெளியிட்டு வருகிறார். மோடி திண்டுக்கல் பயணத்துக்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்ட அவர், "அனைவரும் ஒன்றிணையுங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் இருவருக்கும் மதுரை விமான நிலையத்தில் அறிவுரை." என பதிவிட்டார்.
இரட்டை இலை
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட பதிவில், "விரைவில் ஒரு ராஜினாமா.. அதன் தொடர்ச்சியாக ஒரு இடைத்தேர்தல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலைக்கு மோதல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலை முடக்கம்... The Game starts..." என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஓபிஎஸ் ஹேப்பி
இந்த நிலையில் நேற்று சுவாமிநாதன் வெளியிட்ட பதிவில், "கிண்டியில் இருந்து வந்த அந்த தொலைபேசி அழைப்பு.. தை பிறந்தால் வழி பிறக்கும் பொறுமையாக இருங்கள் என்ற உறுதிமொழி... உற்சாகத்தில் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்கள்... இனிமேல் தான் தரமான சம்பவங்களை பார்க்க போறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.