அவர்தான் வெற்றிக்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் தாவும் நிர்வாகிகள்.. அதிமுகவில் நடக்கும் பரபர மாற்றம்!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் அதிமுக கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைந்தான் மூலம் அதிமுக கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. முக்கியமாக அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முக்கியத்துவம் பெறுவார் என்று கூறுகிறார்கள்.
அதிமுக கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வராகவும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும் கட்சி பெரும்பாலும் பழனிச்சாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
முக்கியமாக தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்ததில், 90% பழனிச்சாமி தலையீடு மட்டுமே இருந்தது என்கிறார்கள். சில தொகுதிக்கு மட்டுமே ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
ஆட்சியை தக்க வைத்துள்ளார்
அதிமுக இந்த இடைதேர்தலில் கஷ்டப்பட்டு 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. ஆனால் லோக்சபா தேர்தலில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட இடங்களில் லோக்சபா தேர்தலில் அதிமுக 1 இடத்தில் மட்டுமே வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தோல்வி
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் , சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 13 அதிமுக வேட்பாளர்கள் எல்லோரும் பழனிச்சாமி ஆதரவாளர்கள். முக்கியமாக, பழனிச்சாமி வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் அதிமுக மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. சேலத்திலும் தோல்வியை தழுவி உள்ளது.
ஓபிஎஸ் உதவி
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் வலுவாக இருக்கும் தொகுதியில் நிலைமை வேறு. அதிமுக வென்ற 9 இடங்களில் 7 இடங்களில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்தான் வேலை பார்த்து இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவுதான் அதிமுக ஆட்சியை காப்பாற்றி இருக்கிறது. தற்போது அதிமுகவிற்கு இருக்கும் ஒரே ஒரு எம்பியும் ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகிகள் செல்கிறார்கள்
இதனால் அதிமுகவில் நிர்வாகிகளின் ஆதரவு தற்போது ஓ. பன்னீர்செல்வம் பக்கம் சென்றுள்ளது. நிர்வாகிகள் பலர் இந்த வெற்றி காரணமாக ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க துவங்கி இருக்கிறார்கள். அதேபோல் அதிமுகவை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் சிலரும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க துவங்கி இருக்கிறார்கள்.
கட்சி கை மாறுகிறதா?
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடக்க உள்ளது. முக்கிய அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நபர்கள், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அதிமுகவின் முழு கண்ட்ரோல் விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வசம் செல்ல வாய்ப்புளள்து.
பாஜக நெருக்கம்
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிச்சாமியை விட ஓ. பன்னீர்செல்வம் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பதாகவும், நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இதை வைத்து ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் முக்கிய காய்களை நகர்த்த வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதிமுகவில் இன்னொரு தர்ம யுத்தம் 2.0 நடக்காமல் இருந்தால் சரி!