சசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்!
சென்னை: சசிகலா, பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பதவிகளுக்காக அடுத்தடுத்து உள்ளே வெளியே ஆட்டத்தை இடைவிடாமலேயே ஆடிவருகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முதல்வர் பதவிக்கான தேர்வாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இதனால்தான் 3 முறை அவரால் முதல்வராகவும் முடிந்தது. சசிகலாவுக்கும் அவர்களது மன்னார்குடி குடும்பத்துக்கும் காட்டிய விசுவாசத்துக்கான உச்சகட்ட பரிசுதான் இந்த முதல்வர் பதவி என்பதை ஓபிஎஸ் உட்பட எவர் ஒருவரும் மறுக்க முடியாது.
சசிகலாவும் அவரது குடும்பமும் நினைத்திருந்தால் ஓபிஎஸ் என்ற நபருக்கு பதிலாக தினகரனையோ அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சின்ன எம்ஜிஆர்களில் ஒருவரையோ முதல்வராக்கி இருக்கவும் முடியும். என்னதான் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஒருசில தர்க்க நியாயங்களின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவியை தூக்கி கொடுத்தது சசிகலா குடும்பம்.
முதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்- புறக்கணித்த துணை முதல்வர் ஓபிஎஸ்
ஓபிஎஸ் தர்மயுத்தம்
அதே சசிகலா, ஒருகட்டத்தில் தானே முதல்வராக முடிவு செய்த போது நியாயப்படி அவருக்கு பதவியை கொடுத்துவிட்டு ஓபிஎஸ் ஒதுங்கி நின்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத, டெல்லி இடைத்தரகர்களாக இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டார் ஓபிஎஸ். அவர்கள் ஓதியபடியே ''தர்மயுத்தத்தை'' தொடங்கினார் ஓபிஎஸ்.
டெல்லிக்கு விசுவாசம்
இதனால் அதிமுக பிளவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிமுகவில் சசிகலா முதல்வராக வரவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த டெல்லி பாஜகவுடன் தயக்கமே இல்லாமல் கைகோர்த்துக் கொண்டார் ஓபிஎஸ். தனது தலைமையில் நேற்று வரை நடந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கும் அளித்து டெல்லிக்கான எஜமான விசுவாசத்தை காட்டிக் கொண்டார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் கூடாரம் காலி
ஆனால் ஓபிஎஸ் ஒரு சரியான ஆளுமை இல்லை என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் அவரது முகாமை காலி செய்தனர். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலரும் அப்படியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டனர். ஒட்டுமொத்த கூடாரமே காலியான நிலையில் டெல்லி பாஜக மேலிட அனுசரணையுடன் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார் ஓபிஎஸ்.
மகனுக்கு பதவிக்காக போராட்டம்
எந்த அரசுக்கு எதிராக தாம் ஓட்டுப்போட்டோமோ அதே அரசில் துணை முதல்வர் பதவியையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டவர் ஓபிஎஸ். மக்களிடத்திலே தன்னுடைய செயலுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பின்னர் தனது மகனை எம்.பியாக்கிய கையோடு அவரை ஒரு பாஜக எம்.பியாகவே நடந்து கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவரை மத்திய அமைச்சராக்கவும் கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளுடன் சமரசம்
ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது; மக்களிடத்தில் பெரிய அளவில் அதிருப்தி இல்லை; எல்லாம் சுமூகமாக போகிற நேரத்தில் இடியை தூக்கி வீசும் வகையில் நானே முதல்வர் வேட்பாளர் என ஆக்ரோஷம் காட்டுகிறார் ஓபிஎஸ். ஆகக் குறைந்தநாட்கள் முதல்வராக பதவி வகித்த காலத்திலேயே ஆட்சியை காப்பாற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையே ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்தான்.. இன்று நானே முதல்வர் வேட்பாளர் என மார்தட்டுகிறார்.
ஈபிஎஸ் சாதனை
ஈபிஎஸ் மட்டும் தலைமைப் பீடத்தில் இருந்திருக்காவிட்டால் இந்த ஆட்சி நிச்சயம் இத்தனை நாட்கள் வண்டியை ஓட்டி இருக்கவே முடியாது. 3 மாசம் தாங்காது, ஒரு வருசம் தாங்காது என அரசியல் ஆருடங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் டெல்லி, பாஜக, இடைத் தேர்தல்கள், புதிய கூட்டணிகள், அன்றாட பிரச்சனைகள், திமுகவின் சவால்கள் என அனைத்தையுமே மிக லாவகமாக கையாண்டு தான் இத்தனை மாதங்கள் அந்தப் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓபிஎஸ் திடீர் கலகம்
இது அதிமுக உள்பட யாரும் எதிர்பாராத சாதனை தான். இந் நிலையில் தான் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் வரிந்து கட்டுகிறார் ஓபிஎஸ். இதில் இடையில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பது எம்ஜிஆரி்ன் தொண்டர்கள் தான். பாவம்!