வாய்தா மேல் வாய்தா.. அம்மா வழியில் ஓபிஎஸ்?.. நாளையாவது விசாரணைக்கு வருவாரா?
சென்னை: ஜெயலலிதா பாணியில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நடைபோடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு இன்னும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். நாளையாவது ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆகவே விசாரணை ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்று ஒற்றைக்காலில் நின்று தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். தன்னிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டபோது ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் தனக்கு தெரிந்த 10% விழுக்காடு உண்மைகளை மட்டுமே கூறியுள்ளேன். கூறாதது 90% விழுக்காடு என்று அதிர வைத்தார் ஓ.பி எஸ்.
பின்னர் மேலிருந்து வந்த அழுத்தத்திற்கு ஏற்ப தேசத்துக்கு ஆற்றும் மிகப்பெரும் சேவை என கருதி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவரின் கரங்களையும் ஒன்றிணைத்து வைத்து எங்கிருந்தாலும் வாழ்க என்று வாயார வாழ்த்திவிட்டு சென்றார் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இப்படி இருவரும் இணைந்த பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு விட்டது. ஆணையம் பல்வேறு நபர்களை இதுவரை விசாரித்து விட்டது.
அந்த வரிசையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை டிசம்பர் 20, ஜனவரி 8, 23 மற்றும் பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியது. அதன் பின்னர் கடந்த 19- ம் தேதி மீண்டும் ஆஜராக சொல்லி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.
இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஓ.பி.எஸ். தற்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை மக்களுக்குத்தான் சந்தேகம் என்கிறார்.
பல முறை சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அவருக்கு பல்வேறு அரசியல் பணிகள் இருக்கலாம் இருந்தாலும் ஆணையத்தில் ஆஜராகிவிட்டு தனக்கு தெரிந்ததை மட்டுமாவது கூறியபின்னர் குறுக்கு விசாரணைக்கு பிறிதொரு நாள் ஆஜராகியிருக்கலாம். அவர் ஆஜராகாமல் நாட்களை தள்ளி வைக்க, வைக்க அவர் மீதான் கேள்விகள் இன்னும் கூர்மையாகும். அதோடு அவருக்கு தற்போது ஆணையத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு அவர் ஆஜராகாமல் இருக்கலாம். இப்படி அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தால் அடுத்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் அப்போது முதல் நபராக நாங்கள் அவரைத்தான் சாட்சியாக அழைப்போம் என்றும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
யாராக இருந்தாலும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது. ஆதாரமில்லாத பொய்களை கூறுவோர் பின்னாளில் அதற்காக வருந்த வேண்டியிருக்கும் என்றும் நம்மிடம் தெரிவித்தார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
இதற்கிடையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிகாலம் கடந்த 24 ம் தேதியோடு அதாவது ஜெயலலிதா பிறந்த நாளோடு முடிந்தது.
தற்போது ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவி நீட்டிப்பு பெற்ற ஆணையம் பிப்ரவரி 28 -ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மன் அவருக்கு 6 வது முறையாக அனுப்பப் பட்டுள்ளது தர்மயுத்தம் நடத்தியபோது பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது ஆஜராகாமல் தொடர்ந்து தள்ளி வைக்கவேண்டியதன் அவசியம் என்னவென்று இப்போது மிஸ்டர் பொதுஜனம் கேட்கிறது. நாளையாவது ஆணையத்தில் ஆஜராகி இதற்கான பதில்களை கூறுவாரா ஓ.பி.எஸ்?