அண்ணா சிலையில் காவிக்கொடி... விஷமிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் -ஓ.பி.எஸ். எச்சரிக்கை
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அண்ணா சிலையை அவமதித்த விஷமிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
மேலும், அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தில் காவிக்கொடி கட்டியதை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்;
குழித்துறை அண்ணாசிலையில் காவி கொடி- குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்
ஓ.பி.எஸ்.ட்வீட்டர் பதிவு
''கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்.''
ட்வீட்டர் பதிவு
''கன்னியாகுமரி ,குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது அவர்களின் எண்ணம். தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள். குற்றவாளிகளை கைது செய்க.''
யார் கொடுத்த துணிச்சல்?
தந்தை பெரியார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைகளைத் தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் காவிக்கொடியால் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு இவ்வளவு துணிச்சல் இந்த விஷமிகளுக்கு எங்கிருந்து வரும்? சமூக அமைதியைச் சீர்குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பெயரில் கட்சி
அண்மைக்காலமாக தமிழகத்தில் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அண்ணாவின் பெயரை தாங்கியுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அண்ணா மற்றும் அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.