தமிழக பட்ஜெட்... மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்... ஓ.பி.எஸ். உறுதி
சென்னை: தமிழக பட்ஜெட்டில் (2020-2021) மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
சென்னை அடையாறில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, உள்ளிட்டவைகள் அடங்கிய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என கூறினார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும். இந்த ஆண்டு மட்டுமே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில் அதிமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழுமையான பட்ஜெட் இது எனக் கூறலாம்.
தமிழக பட்ஜெட் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இப்போதே அது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. துறைரீதியாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்ளிட்டவைகள் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட விவாதிக்கப்பட்டது. மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்தாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
பட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு
தமிழக நிதி நிலைஅறிக்கை தயாரிக்கும் பணிகளில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் கூட, இந்த பட்ஜெட்டில் கவர்ச்சியான அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது. ஏனெனில் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்த முறை பட்ஜெட் தயாராகி வருகிறது. தமிழக நிதிநிலை அறிக்கை முழுமையாக தயார் செய்யப்பட்ட பின்பு, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.