நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய ‘தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.!
சென்னை : அதிமுகவில் இருந்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காகவும், தென் மாவட்டங்களில் பலத்தை மேலும் உயர்த்தும் வகையில் வேறு யாரையும் நம்ப வேண்டாம் நாங்களே களத்தில் இறங்கி பணியாற்றுகிறோம் என ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரே களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்புகள் நிறைந்த ரேஸ் போல அதிமுக உட்கட்சி விவகாரம் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே நடந்த மோதல் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சி சார்பில் கொண்டு வந்த தீர்மானங்களை நிராகரிப்பதாக அதிரடியாக பேசிய சி.வி.சண்முகம், மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும் அவர் பேசினார்.
அதிமுக அதிகார யுத்தம்:புரட்சி பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா- தடுக்குமா ஈபிஎஸ் கோஷ்டி?
அதிமுக விவகாரம்
நீதிமன்ற உத்தரவு காரணமாகவே இந்த பொதுக்குழு நிராகரிக்கப்பட்டதாகவும், அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக அதாவது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அப்போதும் கட்சி விதிகளை காரணம் காட்டி பழைய நடைமுறையே தொடர வேண்டும் என பன்னீர்செல்வம் மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதும் உறுதி என்கின்றனர் அதிமுகவினர். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் ஒவ்வொரு நாளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
புதிய வியூகம்
ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிரடியாக பேசி ஓபிஎஸ் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். இன்றும் ஓபிஎஸ் தரப்பில் மறைமுகமாக இருந்த ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். குறிப்பாக டிடிவி தினகரனுடன் கூட்டு வைத்து இருந்தார் எனக் கூறுவதிலிருந்து ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கம் வேலைகள் தொடங்க விட்டதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில்தான் யாரை நம்பியும் பயனில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என களமிறங்கியுள்ளனர் ஒபிஎஸ்ஸின் வாரிசுகளான ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப்.
களமிறங்கிய மகன்கள்
ஏற்கனவே அரசியலுக்கு பழக்கமான ரவீந்திரநாத் டெல்லிக்கு தந்தையை அழைத்து செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது தந்தையும் மகனும் நரேந்திர மோடியை விட்டு ஒரு அங்குலம் கூட நகராமல் கூடவே சென்றது அனைவருக்கும் தெரியும். டெல்லி பயணம் வெற்றியை கொடுக்கவில்லை என தகவல்கள் வந்தாலும், ஓபிஎஸ்ஐ பொறுத்தவரை இந்த சந்திப்பு அவருக்கு மன நிறைவைத் தருவது போலவே அமைந்துள்ளது.
ஓபிஎஸ் உற்சாகம்
டெல்லியிலிருந்து கிடைத்துள்ள ஆதரவு சிக்னல் மூலம் உற்சாகத்துடன் சென்னை வந்துள்ள அவர் அடுத்ததாக தேனி சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அடுத்து அதிமுக பொதுக்குழுவுக்கு இன்னும் பதினைந்து தினங்கள் இருக்கும் நிலையில் அதற்கான ஆலோசனைகளை தற்போது இருந்தே மேற்கொள்வது அதிக அளவிலான தொண்டர்களை சென்னைக்கு அழைத்துச் செல்வது தனக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஈடுபட உள்ளார்.
தீவிர ஆலோசனை
இதற்கான பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர் அவரது மகன்களான ரவீந்தரநாத் மற்றும் ஜெயபிரதீப். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தின்போதே ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோதே தொண்டர்களை அதிக அளவில் அழைத்து வந்தது தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசிக்கும் பகுதிகளிலேயே போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் வியூக நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன், தமிழகம் முழுவதும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பும் விறுவிறுப்பும் களைகட்டியுள்ளது.