ஓபிஎஸ் சொந்த கட்சிக்காரர்களுடன்தானே பேசினார்.. அது தவறு இல்லையே - சமாளிக்கும் ஜெயக்குமார்
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ. பன்னீர் செல்வம் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன் தான் பேசினார் அதில் தவறேதும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின் ,வளர்மதி, தேனி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யோகம் யாருக்கு இருக்கு - இபிஎஸ் ஒபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன
பாரதியாக வாழ்ந்தவர் சிவாஜி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசன் ஒரு வரலாறு. பல கதாபாத்திரங்களை நம் கண்முன் நிறுத்தியவர் என்று புகழாரம் சூட்டினார். சினிமாவில் சிந்துநதியின் இசை நிலவினிலே என்று பாடும் போது பாரதியாராகவும், செக்கிழுத்த செம்மல் வஉ சிதம்பரமாகவும், வீர பாண்டிய கட்டபொம்மனாகவும் வாழ்ந்து காட்டியவர் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
பேசுவது தவறில்லை
அப்போது அவரிடம் முதல்வர் வேட்பாளர் பற்றியும், ஓபிஎஸ் ஆலோசனை நடத்துவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை,தன் சொந்த கட்சியினருடன் தான் பேசினார் அதில் தவறில்லை என்று கூறினார்.
அக்டோபர் 7ல் அறிவிப்பு
செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம். வெளியில் வந்து கருத்து சொல்லக்கூடாது. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வரும். அதுவரை அனைவரும் பொறுமையோடு இருக்க வேண்டும்.
வேற்றுமையால் தீமை
திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் சட்ட திட்டங்கள் தெரியும். அதனை உணர்ந்து அதற்கு தகுந்த முறையில் பேசவேண்டும். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமை என்றும் தெரிவித்தார் ஜெயக்குமார்.