அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன?
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவாதம் வெடித்திருக்கும் நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டிருக்கும் ட்வீட் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முதலில் சர்ச்சையை கிளப்பியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர்தான் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான பிள்ளையார் சுழி போட்டார்.
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்
செல்லூர் ராஜூ கருத்து
மதுரை நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள். அதேபோல, ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும்' என்று மக்கள் வலியுறுத்தினார்கள். எம்.எல்.ஏக்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றார்.
ராஜேந்திர பாலாஜி பதில்
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கு என்றும் முதல்வர். எடப்பாடியாரை முன்னிறுத்தியே களம் காண்போம்; வெற்றி பெறுவோம் என்றார் ராஜேந்திர பாலாஜி. செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரது பகிரங்க கருத்துகள் அதிமுகவில் விவாதத்தை புயலென கிளப்பிவிட்டது.
அமைச்சர் உதயகுமார்
முதல்வர் எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தல்களை சந்தித்தோம். 2021 தேர்தலையும் எடப்பாடியரையே முன்னிறுத்தி சந்திப்போம் என்று அமைச்சர் உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். இப்படி அதிமுகவில் ஆளுக்கு ஒருவராக முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீரென ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
ஓபிஎஸ் திடீர் ட்வீட்
அந்த ட்வீட்டில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! என பொதுவாக ட்விட் செய்திருக்கிறார் ஓபிஎஸ். அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்காக்வே இந்த பதிவை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கிறார்.
தேர்தலுக்கு பின் முதல்வர் தேர்வு
அதனால்தான் எம்ஜிஆரின் பாடலான, தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! என்கிற பாடலையும் ஓபிஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். சட்டசபை தேர்தலுக்குப் பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்பதாகவே ஓபிஎஸ்ன் பதிவு வெளிப்படுத்துகிறது. அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவும் ஓபிஎஸ் இப்படி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் என்பதே அதிமுகவினரின் கருத்து.