"ஆபரேஷன்" ஓபிஎஸ்.. ஸ்டாலினுக்கு கொளத்தூரில் வைக்கும் செக்.. "அவரை"யே டைரக்டாக களம் இறக்குகிறார்!
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து ஓபிஎஸ் மகன் களமிறங்குவதாக தெரிகிறது
சென்னை: முக்கியமான விஐபிக்கள் எல்லாரும் முக ஸ்டாலினையே குறி வைத்து வருகிறார்கள்.. அந்த வகையில், லிஸ்ட்டில் கடைசியாக இணைந்துள்ளவர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்.. ஸ்டாலினுக்கு எதிராக மகனை களமிறக்கும் வேலையை கையில் எடுத்துள்ளார் ஓபிஎஸ்!
தேர்தல் நெருங்கி வருகிறது.. இதனால் பிரதான கட்சிகள் அதற்கான களப்பணியில் இறங்கிவிட்டன.. விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன..
அந்த வகையில், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடம் எகிற வைத்து வருகின்றனர்.
அரசியல்
வழக்கமாக விஐபி தொகுதி என்றால், அதற்கு கூடுதல் மவுசு இருக்கும்.. அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிட்டு தொடர் வெற்றி பெறும் தொகுதிகள்தான் இந்த விஐபி தொகுதிகள் அந்தஸ்தில் வரும்.. அதனால்தான், அந்த தலைவர்கள் தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியையும் தக்க வைத்து கொண்டு வருவார்கள்.
டிமாண்ட்
எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் இந்த முறையும் போட்டியிட உள்ளனர்.. இதில் எடப்பாடியாரின் தொகுதியை காட்டிலும், ஸ்டாலினின் தொகுதிக்குதான் டிமாண்ட் அதிகமாகி உள்ளது.. இந்த தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுவேன் என்று குஷ்பு சொன்னார்.. ஆனால் அவர் உதயநிதியை டார்கெட் செய்து வருகிறார்.
சீமான்
அதேபோல, ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று சீமான் சொன்னார்.. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை.. ஒரு கட்சி தலைவரை எதிர்த்து, அதே தொகுதியில் இன்னொரு கட்சி தலைவர் போட்டியிட்ட வரலாறு தமிழகத்தில் இதுவரை இல்லை.. அதனால், சீமான் எங்கு போட்டியிட போகிறார் என்று தெரியவில்லை.
ஜெயபிரதீப்
இதுபோக அதிமுகவில் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டியும் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.. ஆக மொத்தம் எல்லா கட்சிக்காரர்களின் குறியும் கொளத்தூரிலேயே உள்ளது... இந்த வரிசையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பும் இணைந்துள்ளார். இவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 25 பேர் அதிமுக தலைமைக்கழகத்தில் மனு அளித்துள்ளனராம்.
கம்பம்
ஆனால், கம்பம் தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிட போவதாக செய்திகள் ஏற்கனவே வந்தது.. இதற்கு காரணம், பன்னீர் செல்வம் மாமனார் ஊர் இந்த தொகுதியில்தான் உள்ளது.. ஜெய பிரதீப்பின் மாமனாரும் இங்குதான் உள்ளார்.... இதுபோக சமுதாய வாக்குகள் சுற்றுவட்டாரம் முழுவதும் நிரம்பி தளும்புகின்றன.. எப்படி இருந்தாலும் தேனியை தவிர வேறு எங்கு ஜெயபிரதீப் போட்டியிட வாய்ப்பிருக்காது என்றே நம்பப்பட்டு வருகிறது.
ஓபிஎஸ்
இந்த சமயத்தில் கொளத்தூர் என்ற பேச்சு அடிபடுகிறது.. இதற்கு காரணம் ஓபிஎஸ்தான் என்கின்றனர். இதற்கு காரணம், சொந்த தொகுதியைவிட, நட்சத்திர தொகுதியில் மகன் போட்டியிட்டால், அது அவரது அரசியலுக்கு வலு சேர்க்கும் என்று கணக்கு போடுகிறார்.. திமுக தலைவரையே, ஸ்டாலினையே தன் மகன் எதிர்த்து போட்டியிடுகிறார் என்ற பிம்பத்தையும் அது ஏற்படுத்தும் என்று ஓபிஎஸ் நம்புவதாக தெரிகிறது.
புதுமுகங்கள்
ஆனால், இதெல்லாம் ஸ்டாலின் முன்பு எடுபடுமா? தெரியவில்லை.. 2011, 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில்தான் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றியைக் கண்டார்... இப்போது 3-வது முறையாகவும் கொளத்தூரிலேயே களமிறங்குகிறார்... இந்த தொகுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான தொகுதியும்கூட.. வளர்ச்சி பணிகள், திட்டங்களை, அடிப்படை தேவைகளை முன்னின்று செய்து தந்து வருபவர்.. தொகுதி மக்களின் ஆதரவை பெற்றவர்.. இப்படி இருந்தும், ஸ்டாலினை எதிர்க்க இப்படி வரிசையாக புதுமுகங்கள் களமிறங்குவது ஆச்சரியம்தான்..!