எங்கு போனது விக்ரம்.. தேடிக் கண்டுபிடித்துத் தருமா சந்திரயான் ஆர்பிட்டர்?
Recommended Video
சென்னை: விக்ரமுக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் சோகத்தில் உள்ளனர் இந்தியர்கள். ஆனால் விக்ரமுக்கு என்ன நேர்ந்தது, அது தற்போது எங்கிருக்கிறது என்பதை சந்திரயான் 2 ஆர்பிட்டர் கண்டுபிடித்துக் கொடுக்க வாய்ப்புள்ளது.
சந்திரயான் 2 திட்டம் முழுத் தோல்வி அல்ல என்பதே நமக்கு கிடைத்துள்ள இறுதி அறிவிப்பு. 3 முக்கிய அம்சங்கள் அதாவது ஆர்பிட்டர் - விக்ரம் லேன்டர் - பிரக்யான் ரோவர். இந்த மூன்றில் ஆர்பிட்டர் சூப்பராக உள்ளது. நிலவின் சுற்றுப் பாதையில் அழகாக சுற்றி வருகிறது. விக்ரம் லேன்டர்தான் தோல்வி அடைந்துள்ளது.
விக்ரமுக்கு என்ன ஆனது என்பதுதான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. அதன் கதி குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது சாமானிய மக்களின் கேள்வி என்னவென்றால் ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேன்டரின் நிலையை அறிய முடியுமா என்பதுதான். முடியும் என்பதே விஞ்ஞானிகளின் பதிலாக உள்ளது.
உங்களுடன் இருப்பேன்.. இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட மோடி.. இதை கவனித்தீர்களா?
விக்ரம் லேன்டர்
விக்ரம் லேன்டர் கடைசியாக எந்த இடத்தில் இறங்க முயற்சி செய்ததோ அந்தப் பகுதியில் ஆர்பிட்டர் மூலமாக ஆய்வு செய்து புகைப்படம் எடுக்க வாய்ப்புள்ளது. அப்படி இறங்கும்போது விக்ரம் லேன்டரின் கதி என்ன என்பது குறித்துத் தெரிய வரலாம். மொத்தம் எட்டு பே லோடுகள் (பல்வேறு வேலைகளுக்காக) சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும்
ஒவ்வொரு பேலோடுக்கும் ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பேலோடில் ஒன்று, டிஎம்சி 2 எனப்படும் தரைப் பகுதியை ஸ்கேன் செய்து புகைப்படம் எடுக்கும் கேமரா ( Terrain Mapping Camera 2). இந்த கேமராதான் தற்போது நமக்கு பெரும் நம்பிக்கை தருகிறது. இந்த கேமரா மூலமாக விக்ரம் லேன்டர் கதியை ஆராய்ந்து நாம் உறுதியான தகவலைப் பெற முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விக்ரம் கதி தெரியும்
மேலும் ஆர்பிட்டரில்தான் பெரும்பான்மையான ஆய்வு சாதனங்கள் உள்ளன என்பதால் ஆர்பிட்டர் மூலம் நாம் ஆய்வுகளைத் தொடர முடியும். தற்போது ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் திட்டமிட்டபடி சுற்றி வருகிறது. தனது பணிகளையும் அது செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக விக்ரம் லேன்டர் கடைசியாக இருந்த பகுதியை புகைப்படம் எடுத்து அது அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வுகள் தொடர் கதை
விக்ரம் லேன்டருக்கு நேர்ந்த கதி குறித்து தெளிவாக தெரிந்த பின்னர் அதில் நடந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு வருங்காலத்தில் தவறில்லாமல் லேன்டர்களை அனுப்பும் திட்டங்களை இஸ்ரோவால் மேற்கொள்ள முடியும் என்பதால் ஆர்பிட்டர் அனுப்பப் போகும் படங்களுக்காக தேசமே காத்திருக்கிறது.