மின்வாரியத்தில் பணியமர்த்தப்பட்ட வெளி மாநிலத்தவர் தமிழ் கற்பது கட்டாயம்.. இல்லனா வேலை காலி
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவர்கள், 2 ஆண்டுகளுக்குள் தமிழை கற்று கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக இருந்த உதவி பொறியாளர் பணியிடங்களில் 38 வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில்பல்வேறு துறைகளின் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர்.
நிலைமை இவ்வாறு இருக்க தமிழக அரசுப் பணிகளில், வெளி மாநிலத்தவர்களை நியமிப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கும் இன துரோகம் என பல்வேறு தரப்பினரும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இருப்பினும் வெளி மாநிலத்தவர்கள் தேர்வுகளின் மூலம் தான் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டிலுள்ள எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் தேர்வெழுதி பணியில் சேரலாம், என்ற உத்தரவின் அடிப்படையில் தான் தமிழக மின்சார வாரியத்தில் வெளி மாநிலத்தவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்தது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக மின்சார வாரியத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 36 வெளி மாநிலத்தவர்களும் 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியை கட்டாயம்கற்றுக் கொண்டாக வேண்டும். இதுதான் சட்ட விதிமுறை, இல்லையென்றால் அவர்கள் தங்களுடைய தமிழக மின்வாரிய பணியை இழக்க நேரிடும் என தகவல் தெரிவித்தாா்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளிமாநிலத்தவர்கள் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் இவ்விகாரத்தில் தலையிட முடியாது என அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரம் கடைகள் திறப்பதால் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லையென்றார்.
கோடை கால பயன்பாட்டால் மின்சாரம் தேவை தமிழகத்தில் 16,500 மெகாவாட் இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் 16 ,100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டார். பல இடங்களில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆங்காங்கே பழுதாகின. இதனால் ஏற்பட்ட மின்தடையை மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சரிசெய்து விட்டனர். ஆனால் இதை மின்வெட்டு என எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார்