தமிழகத்திற்கு புது சவால்.. 20% கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பின்னணி இதுதான்.. விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதில், தமிழகம் இப்போது புது சவாலை சந்தித்து வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
20 சதவீதம் அளவுக்கு இன்று நோய் பாதிப்பு அதிகரிக்க, இந்த சவால்தான் காரணம் என்றும், அவர் சுட்டிக் காட்டினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், புது சவாலை தமிழகம் எதிர்கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு.. ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்
பிற மாநிலங்கள்
வெளிமாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களை மீட்டு இங்க கொண்டு வரவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கள் கூறுகிறார்கள். அவர்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதில்தான் சவால் உள்ளது. நாம் கடந்த பல நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.
பாதிப்பை குறைத்தோம்
ஒரு கட்டத்தில் மிக அதிகமான அளவுக்கு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு இருந்தது. திங்கள்கிழமை 798 என்ற அளவுக்கு பிரச்சனை இருந்த நிலையில் தொடர்ச்சியாக நாம் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு வருகிறோம். இப்போது வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு பலர் வந்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்த விமானங்கள்
10 விமானங்கள் தமிழகம் வந்தன. அதில் 3 விமானத்தில், பயணித்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டன. மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும்கூட, ஒரே விமானத்தில் பல மணி நேரங்கள் ஒன்றாக பயணம் செய்துள்ளதால், உடன் பயணித்த பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பாஸிட்டிவ் என்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரயில் பயணிகள்
எனவே, மத்திய அரசு விதிமுறைப்படி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அவர்களை வைத்துள்ளோம். நேற்றுமுன்தினம் டெல்லியில் இருந்து 849 பேர் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளனர். பரிசோதனை நடத்தப்பட்டு அதன் முடிவு இன்று இரவுதான் வெளியாகும். இன்று சுமார், 1000 பயணிகள் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை வரவேற்று பரிசோதனை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சவால் ஆகும்.
சிவகங்கை நிலை
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கேஸ் இல்லாத நிலையில் 9 பேர் மகாராஷ்டிராவில் இருந்து இன்று அந்த மாவட்டத்திற்கு வருகைதந்த போது செக்போஸ்ட் பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிவகங்கையில் 9 பேர் நோயாளிகள் உள்ளதாக லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்கும் பிரச்சினையில்லை. இன்று மகாராஷ்டிராவில் இருந்து வந்த 44 பேருக்கு பரிசோதனை செய்தபோது பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை திருநெல்வேலி மாவட்ட பாதிப்பு எண்ணிக்கையில் சேர்ந்துவிடும். நோய் பரவலை நாம் கடுமையாக தடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகை தருவாரோல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
20 சதவீதம் பாதிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து லாரி ஓட்டுனராக பணியாற்றி தமிழகம் வருவோருக்கும், பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 93 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்குதான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இன்றைய பாதிப்பில் இது சுமார் 20 சதவீதம் ஆகும். எனவே இது ஒரு புது சவால். அதையும் சந்திக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது.
கண்காணிப்பு
ஒருவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாவிட்டாலும், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களை, 14 நாட்கள் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கிறோம். வீட்டில் அவர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டெல்லி மாநாடு, கோயம்பேட்டை தொடர்ந்து தற்போது, வெளி மாநிலங்களிலிருந்து வருவோரால், அதிக பாதிப்பு பதிவாவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.