எதுக்கு ஆளுநர் பதவி.. அது தேவையே இல்லை.. இதுதான் திமுக நிலைப்பாடு.. ஸ்டாலின் பொளேர் பேச்சு
சென்னை: தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை என மத்திய அரசு வெறுப்பு அரசியலை உண்டாக்கி வருகிறது.
ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரின் நிலை என்ன?. 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்
அண்ணா, கலைஞர் குரல் கொடுத்த மாநில சுயாட்சியின் நிலை என்ன? என்றும் , 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு அறிவித்தது. இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார் மு.க. ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதே போல், சட்டசபை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு மக்களுக்கு உள்ளது. ஆகவே, சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய மு.க. ஸ்டாலினுக்கு, சட்டமன்ற நடவடிக்கையில் சரிபாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.