ஆ.. மூச்சு முட்டுதே.. "ஆக்ஸிஜன்" அரசியலால் திணறும் இந்தியா.. என்ன செய்ய போகிறார் மோடி?
தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய அரசு என்ன செய்ய போகிறது?
சென்னை: தினம் தினம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர தொற்று காரணமாக, உயிரிழப்புகள் பெருகி வரும் நிலையில், மத்திய அரசு என்ன செய்ய போகிறது? நிலைமையை சமாளிக்க என்ன மாதிரியான நடவடிக்கையை கையில் எடுக்க போகிறது?
Recommended Video
நாட்டு மக்களின் கோபம் தற்போது மத்திய அரசை நோக்கி திரும்பி வருகிறது.. இதற்கு 3 காரணங்கள் உள்ளன.. முதலாவதாக, இந்த இரண்டாவது பரவல் குறித்து, கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே நமக்கு விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. ஆனால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள தவறிவிட்டது. அதாவது முதல் கொரோனா அலை பரவலில் எந்தவிதமான பாடத்தையும் கற்று கொள்ளவில்லை என்பதே இதன்மூலம் தெளிவாகிறது.
கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்?
இந்த நிலைமைக்கு யார் காரணம்? என்ன காரணம்? சரியான திட்டமிடல் இல்லை என்று பிரியங்கா காந்தி சொல்லி இருந்தார்.. அவராவது எதிர்க்கட்சி தரப்பு என்று ஒதுக்கிவிடலாம்.. ஆனால், நேற்று முன்தினம் டெல்லி ஐகோர்ட்டே, மோடி அரசை கடுமையாக விமர்சித்ததை இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது.. "உங்களுக்கு இனிமையான நேரத்தை நீங்க இஷ்டத்துக்கு எடுத்துப்பீங்க, மக்கள் அதுவரை செத்து மடியணுமா? என்று காட்டமாக கேட்டது.
மோடி
இப்படி ஒரு நிலைமை பற்றி எரியும்போதுதான், அதில் மேலும் எண்ணெய் ஊற்றுவதுபோல, தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.. பல மாநிலங்களில், ஏன் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு பஞ்சம் வந்துள்ளது.. வெயிலையும் பொருட்படுத்தாமல் உயிரை காப்பாற்றி கொள்ள வயதானவர்கள் ஆஸ்பத்திரியில் கால்கடுக்க காத்திருந்தும், அவர்களில் பலர் தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சோனியா காந்தி
அதேபோல தடுப்பூசியின் விலையும் கூடி வருகிறது.. இதைதான் சோனியா காந்தி கேட்டுள்ளார்.. ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது சோனியாவின் கேள்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கேள்வியும் ஆகும்.. ஒரே நாடு ஒரே வரி என்று மட்டும் சொல்லிவிட்டு, தடுப்பூசிக்கு மட்டும் வேறு வேறு விலை நிர்ணயிப்பது எந்த வகை நியாயமாக இருக்க முடியும்?
நிறுவனம்
அப்படியானால் உற்பத்தி குறைபாடு நிகழ்கிறதா.. இப்போதைக்கு 2 நிறுவனங்கள்தான் ஊசி தயாரிக்கிறார்கள்.. அதுவும் தனியார் நிறுவனங்கள் என்பதால், இலவசத்தை எதிர்பார்க்க முடியாது.. அதேசமயம், இதுதான் விலை என்று குறிப்பிட்ட விலைநிர்ணயத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.. 250 ரூபாய் ஊசியானது, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே தனியார் என்றால் 600 ரூபாய். இதை மட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. உயிரை காக்கக்கூடிய தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக தரக்கூடாதா என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவும் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
அனுமதி
வேண்டுமானால், பொதுத்துறைக்கு இந்த தடுப்பூசியை தயாரிக்க அனுமதி வழங்கலாம்.. அப்படி அனுமதி வழங்கினாலும் எப்படியும் 6 மாசம் ஆகிவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.. எனவே, தடுப்பூசி தயாரிக்கும் பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளும் வகையில், அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டி உள்ளது..
டிகே ரங்கராஜன்
இதைதான் சில தினங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பி டிகே. ரங்கராஜன் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தார். அப்போது ஒரு யோசனையையும் அதில் சொல்லி இருந்தார். செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்திற்கு போதுமான நிதிஒதுக்கீடு செய்து சீரமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் நினைவுபடுத்தி இருந்ததையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
அதீத நம்பிக்கை
அடுத்ததாக, இந்தியாவின் சீரியஸ்தன்மை தெரியாமல், ஆயிரக்கணக்கான டன் ஆக்ஸிஜன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.. ஆக்ஸினுக்கு இங்கே தட்டுப்பாடு வரப்போவதில்லை என்ற அதீத நம்பிக்கையில் இந்த ஏற்றுமதி நடந்ததா? அல்லது அண்டை நாடுகளில் ஆளுமையை விஸ்தரிப்பதற்காகவும், தங்களின் ஸ்திரத்தன்மையை காட்டி கொள்வதற்காகவும் இப்படி ஏற்றுமதி நடந்ததா என்று தெரியவில்லை. உயிருக்கு ஆதாரமான ஆக்ஸிஜன் இல்லாமல், அதன் பலனை இன்று மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்..
இளைஞர்
மும்பையில், 2 நாளைக்கு முன்பு, இளைஞர் ஒருவர் கொரோனா பாதித்த தன்னுடைய அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வந்தார்.. அங்கே இடம் கிடைக்காமல், வெளியே நின்றிருந்த ஆம்புலன்ஸில் படுக்க வைத்தார்.. ஆனால், ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவர் அப்பாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. மகன் இங்கும் அங்கும் ஓடுகிறார்.. டாக்டர்களிடம் கண்ணீருடன் கெஞ்சுகிறார்.. எதுவுமே செய்ய முடியவில்லை..கடைசியில் மகன் கண் முன்னாடியே, கை கால்கள் துடிதுடித்து அப்பாவின் மூச்சு நின்றுவிடுகிறது. அடுத்த செகண்டே தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் தூக்கி வீசியெறிந்து கதறினார் அந்த இளைஞர்.. "இவ்வளவு பணம் இருந்தும் என் அப்பாவை காப்பாற்ற முடியவில்லையே" என்று வெறிபிடித்தவாறே அழுது புரண்டார்.
தெலுங்கானா
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழக அரசைக் கேட்காமலேயே தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு தூக்கி தந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை நமக்கு ஏற்படுத்தியது.. இப்படி ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னது அதைவிட அதிர்ச்சியாக நமக்கு இருந்தது.
சுவாசம்
இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், மாநில உரிமைக்கு உட்பட்ட சுகாதாரத்துறையை மத்திய அரசு கையில் எடுத்து கொண்டுவிட்டது.. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலிலாவது, எந்த மாநிலங்களில் தொற்று அதிகமாக இருக்கிறதோ, அந்த மாநிலங்களே சுயமாக முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கலாம்.. யாராலும் சுயமாக இயங்க முடியவில்லை.. ஒருவேளை இயங்கியிருந்தால், இவ்வளவு பெரிய இழப்புகளை மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே, நிலைமையை சீரமைக்க மத்திய அரசு உடனடியாக முன்வரவேண்டும்.. இல்லாவிட்டால் மூச்சு திணறி திணறியே இந்தியாவின் சுவாசம் படுமோசமாகிவிடும்.. செய்வாரா பிரதமர் மோடி?..!