மே. வங்கத்திலிருந்து ரயிலில் சென்னை வந்தது 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்.. மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்
சென்னை: கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடைந்தது.
மேற்கு வங்கத்திலிருந்து தண்டையார்பேட்டை வந்த ரயிலை, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளதாகவும் இது மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் மிகப் பெரிய தேவையாக இருக்கிறது . ரூர்கேலா பகுதியில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்துள்ளது. இவற்றை எந்தெந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்பதை அதிகாரிகள் பட்டியலாக தயாரித்து வைத்துள்ளனர் அதை அனுப்புவார்கள் ஒரு இக்கட்டான காலகட்டத்தை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீளும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.