ஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு "SOS" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு!
சென்னை: வடஇந்திய மாநிலங்கள் ஆக்சிஜன் இன்றி கடும் தட்டுப்பாட்டை சந்தித்த நிலையில் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் தொடங்கி கேரளா வரை பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கழுத்தை நெறிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்தியாவே ஆக்சிஜனுக்காக அல்லாடிக்கொண்டு இருக்கிறது.. முக்கியமாக டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் இன்றி தினமும் பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி
கொரோனா மரணங்களை விட, ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வந்தது. வடஇந்திய மாநிலங்களில் பெரிய பிரச்சனையாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது தென்னிந்தியாவிலும் பரவி உள்ளது.
தென்னிந்தியா
தென்னிந்திய மாநிலங்களில் தினசரி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் வரை ஆக்சிஜன் மிகுதியாக இருந்த கேரளாவில் கூட தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. கேரளாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
கடிதம்
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது. எங்களிடம் கூடுதல் ஆக்சிஜன் இருந்த போது மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் கொடுத்தோம், ஆனால் இப்போது எங்களிடமே ஆக்சிஜன் இல்லை, என்று கேரளா அரசு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் பல ஆக்சிஜன் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
கேரளா
கேரளாவில் விரைவில் 5 லட்சம் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் வரும் என்பதால் அந்த மாநில அரசு அச்சத்தில் உள்ளது. முறையாக திட்டங்களை வகுத்து இருந்த கேரளாவிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ள போது, தமிழகத்திலும், ஆந்திர பிரதேசத்திலும் நிலைமை மோசமாகி உள்ளது. இரண்டு மாநிலங்களுக்களும் பிரதமர் மோடிக்கு எழுதிய அவசர கடித்ததில், எங்களிடம் போதிய ஆக்சிஜன் இல்லை. கூடுதல் ஆக்சிஜனை உடனே அளித்திட வேண்டும், எங்களிடம் கையிருப்பு காலியாகி வருகிறது என்று கூறியுள்ளன.
தமிழ்நாடு
கர்நாடகாவும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளது. தமிழகமோ ஆக்சிஜன் தேவை இருக்கும் போதும் கூட ஆந்திர பிரதேசத்திற்கு ஆக்சிஜன் அளித்து வருகிறது. தமிழகத்திற்கு தற்போது 440 டன் ஆக்சிஜன் தேவை. வரும் நாட்களில் இது 880 டன் ஆக உயரும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது போதாது இனி வரும் நாட்களில் தேவை அதிகரிக்கும் என்று அரசு கூறியுள்ளது.
ஆந்திர பிரதேசம்
தமிழகத்தில் உள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் இருந்து 58 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திர பிரதேசத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் வரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் காத்துக்கொண்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்தும் தற்போது ஆக்சிஜன் வர தொடங்கி உள்ளதால், தமிழகத்திற்கு கொஞ்சம் கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர பிரதேசம்
ஆந்திராவை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இதுவரை 480 டன் ஆக்சிஜன் தேவை. தற்போது அதன் தேவை 590 டன்னாக அதிகரித்துள்ளது. இது 910 டன் ஆக உயரும் என்று அம்மாநில அரசு கூறி வருகிறது. இதனால் வரும் நாட்களில் ஆந்திர பிரதேசமும் ஆக்சிஜன் இன்றி திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகம், ஆந்திர பிரதேசம் தற்போது பெறும் ஆக்சிஜன் அளவை விட வரும் நாட்களில் இரண்டு மடங்கு பெற்றால் மட்டுமே நிலைமையை சரி செய்ய முடியும்.
தென்னிந்தியா தட்டுப்பாடு
தென்னிந்தியாவில் இதுவரை இல்லாமல் இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் ஏற்பட்டுவிட்டன. இதனால் மத்திய அரசு உடனடியாக தமிழகம் உட்பட தென்மாநிலங்களுக்கு கூடுதல் ஆக்சிஜனை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை ஆக்சிஜனை உயர்த்துவது குறித்து எந்த விதமான உத்திரவாதத்தையும் மாநில அரசுகளுக்கு கொடுக்கவில்லை!