கம்மி 'சீட்'.. நாம தான்யா காரணம்.. அவங்கள குறை சொல்லி யூஸ் இல்ல - ப.சிதம்பரம் சுளீர் பேச்சு
சென்னை: திமுகவில் குறைவான சீட் பெற்றதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், "தமிழக காங்கிரஸுக்கு கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் குறைவான சீட் தான் கொடுத்திருக்காங்க. இதற்கு திமுகவை குற்றம் சொல்லி எந்த பலனும் இல்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் நமக்கு ஒதுக்கிய 63 இடங்களில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றோம். அதேபோல், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் கிடைத்த போதும், 8 தொகுதிகளில் மட்டுமே நம்மால் வெற்றியைப் பெற முடியும். இதனால் காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தால் வெற்றி பெறுவார்களோ என்ற சந்தேகம் திமுகவுக்கு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் வெற்று பெறுவதை வைத்துதான் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கணிப்பார்கள். வெற்றி பெற வேண்டுமென்றால் நமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். குறிக்கோள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். குறியே இல்லாமல் அம்பு எய்தால் அது எங்கே பாயும்.
நச்சு இயக்கமான பாஜகவைக் காலூன்ற விடக் கூடாது. தமிழகம் வந்த அமித் ஷாவிற்கு வானதி சீனிவாசன் 2 தலையாட்டி பொம்மைகளை வழங்கினார். அதைப் பார்க்கும்போது ஓபிஎஸ், இபிஎஸ் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். பாஜகவை 20 தொகுதிகளிலும் வெற்றி பெறவிடக் கூடாது" என்று ப.சிதம்பரம் பேசினார்.