இவை சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? கொரோனா பற்றிய மோடி பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களுக்கு வரிசையாக தமிழில் ட்வீட் வெளியிட்டு கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்களின், திறப்பு நிகழ்ச்சியில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர் பேசுகையில், பிற நாடுகளை ஒப்பிட்டால் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா சிறப்பான இடத்தில் இருப்பதாக புகழ்ந்துரைத்தார். சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுப்பதன் விளைவாகத்தான் இந்தியா இந்த அளவுக்கு சிறப்பான நிலையில் இருக்கிறது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
50 கிமீ வேகத்தில் சூறாவளி... உயரும் கடல் அலை... வெளுத்து வாங்கப் போகும் மழை
மோடி பேச்சு
மேலும், இந்தியாவில் குணமடைவர் விகிதம் என்பது பிற நாடுகளோடு ஒப்பிட்டால் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், தினசரி குணமடைவோர் விகிதம் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அவர் பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே, உள்ள சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் இருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்த நிலையில் தான் பிரதமர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
சரியான முடிவுகள் இதுதானா?
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதை பாருங்கள்: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்' என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?
தொழில்கள்
ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?
தொழிலாளர்கள்
ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.