சேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்
சென்னை: தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடாக பிரித்தாலும் பிரிப்பார்கள் போல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது.
இந்த நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ப சிதம்பரம் பேசினார்.
ஆர் எஸ் எஸ்
அப்போது அவர் கூறுகையில் சர்தார் வல்லபாய் படேல் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் அல்ல. படேல் காங்கிரஸ் தலைவர். வரலாற்றில் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர் எஸ் எஸ் திருடிக் கொண்டது.
அதிமுக அரசு
காஷ்மீர் விவகாரத்தில் நேருவுக்கும் படேலுக்கும் ஒத்த கருத்தே இருந்தது. இவர்களுக்கு ஒத்த கருத்து இல்லை என பாஜகவினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு.
மக்களின் நிலை
தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன.
சலசலப்பு
காங்கிரஸில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும் கலக்கத்தையும் நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை. மதசார்பின்மை பற்றி விவாதம் எழுந்த போது காங்கிரஸில் சலசலப்பும் கலக்கமும் தற்போது இருக்கிறது என்றார் அவர்.