''பணத்திற்காக ஏங்குபவர்கள் நாங்கள் அல்ல''.. ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை..!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு சவால் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் காவலில் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரிக்கணக்கில் தெரியப்படுத்தாமல் வெளிநாட்டில் சொத்துக்களோ, நிறுவனங்களோ தங்களுக்கு இருந்தால் அதை இந்திய அரசு ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் சவால் விடுத்துள்ளனர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்.
பொதுவாழ்வில் 50 ஆண்டுகள்
ப.சிதம்பரம் 50 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் என்றும், அவரது நேர்மையையும், நாட்டின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பையும் இழிவுப்படுத்தும் பிரச்சாரத்தால் அழிக்கமுடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உண்மை தோற்காது எனவும் அது இறுதியில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள்
ப.சிதம்பரத்தின் புகழுக்கும், நற்பெய்டருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என சாடப்பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சுதந்திரமாகவும் ஊடகங்கள் செயல்படவில்லை என்பதை நினைத்து தாங்கள் உளமாற வருத்தப்படுவதாகவும் சிதம்பரம் குடும்பத்தினர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பணத்துக்கா பஞ்சம்
பணத்திற்காக ஏங்குபவர்கள் தாங்கள் இல்லை என்றும், தங்களது சிறிய குடும்பத்துக்கு போதுமான சொத்துக்கள் உள்ள நிலையில் சட்டவிரோத வழிகளில் பணம் தேட வேண்டிய அவசியமில்லை எனவும் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கையில் உருக்கமாக கூறியுள்ளனர் .
கடமை கட்டுப்பாடு
ஊடகத்தினர் கண்ணியம் தவறாமல், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், சட்டத்தின் ஆட்சி மட்டுமே ஊடகம் உட்பட அனைவரையும் பாதுகாக்கும் என்பதை ஊடகவியலாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.