காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராகிறாரா ப.சிதம்பரம்..? மோடியை நோக்கி கேள்விக்கணைகள் வீசுவதற்கு பரிசு
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வழங்குவது பற்றி அண்மையில் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பதுடன், பிரதமர் மோடியை நோக்கி ப.சிதம்பரம் கேள்விக்கணைகளை வீசுவதற்கு பரிசாக அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கைகூடி வரவுள்ளது.
சிறைவாசத்துக்கு பின்பு ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு எதிராக மிக உறுதியாக குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மோடி சொன்ன ஆத்ம நிர்பார் என்பது என்ன? கூகுளில் வலைவீசிய இந்தியர்கள்- ட்விட்டரிலும் களைகட்டிய விவாதம்
சோனியாகாந்தி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப்பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பின் காரணமாகவும், ஏற்கனவே அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையின் காரணமாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் திடமாக மறுப்பதால், தற்போதைய சூழலில் ப.சிதம்பரத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பதற்கான யோசனையில் உள்ளார் சோனியா.
கேள்விக்கணைகள்
காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் இருக்கும் நிலையில் அவர்கள் யாரும் ப.சிதம்பரத்தை போல் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. தொடர்ந்து பிரதமர் மோடியின் நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார் ப.சிதம்பரம். குறிப்பாக திகார் சிறைவாசத்துக்கு பின்னர் மத்திய அரசை உன்னிப்பாக கவனித்து உடனுக்கு உடன் எதிர்வினை ஆற்றி வருகிறார் ப.சிதம்பரம். மேலும், பொருளாதாரம் உள்ளிட்ட பலதுறைகள் பற்றிய விவரங்களை ஆழமாக அலசி ஆராயக்கூடியவர் சிதம்பரம்.
வேட்டி கட்டிய தமிழர்
ஒரு காலத்தில் குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறை மத்தியில் ஆட்சி அமைத்த போது வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆகிறார் என சிதம்பரத்தை மையமாக வைத்து தகவல்கள் உலா வந்தன. ஆனால் மீண்டும் மன்மோகன் சிங்கிடமே பிரதமர் பொறுப்பை ஒப்படைத்தார் சோனியா. அப்போது சிதம்பரத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் இப்போது காங்கிரஸ் கட்சியில் கிடைப்பதற்கான சமிஞ்கைகள் தென்படத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது முழுவீச்சில் செயல்படுவதால் சிதம்பரத்தின் நடவடிக்கைகள் ராகுல்காந்தியையும் கவர்ந்துள்ளன.
கொரோனா பதற்றம்
கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவர் தொடர்பாக விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே குலாம் நபி ஆசாத், பிரியங்கா காந்தியின் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன. மேலும், ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்ற குரலும் அக்கட்சியில் மீண்டும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.