அழிவை நோக்கி போறோம்; நம்ம இடத்துல பாஜகவை உட்கார வச்சுறாதீங்க... கொட்டி தீர்த்த ப.சிதம்பரம்!
சென்னை: காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரசின் இடத்தை பிடித்து விடும் என்றும் அவர் கூறினார்.
நாம் எதிலும் தவறான யுக்தியை கையாளக் கூடாது. காங்கிரசின் தவறான யுக்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது என்றும் ப.சிதம்பரம் பேசினார்.
பேச்சுவார்த்தை இழுபறி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி
திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஆனால் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் அதிருப்தி நிலையே நிலவுகிறது.
கண்ணீர்விட்ட கே.எஸ். அழகிரி
திமுக மிக மிகக் குறைவான தொகுதிகளையே தருகிறது. இது மட்டுமில்லாமல் நம்மை சரியாகவும் நடத்தவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்ணீருடன் கொட்டி தீர்த்து விட்டார். மிகவும் விரக்தியுடன் இருக்கும் காங்கிரஸ் மக்கள் நீதி மய்யம் பக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிது. இந்த நிலையில் காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.
அழிவில் இருந்து காங்கிரசை மீட்க வேண்டும்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரசின் இடத்தை பிடித்து விடும். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் எதிலும் தவறான யுக்தியை கையாளக் கூடாது. காங்கிரசின் தவறான யுக்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் அகில இந்திய அளவில் முக்கியமான தேர்தலாகும். தமிழக காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது. எனவே காங்கிரசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.