வெற்று வாக்குறுதியை நம்ப, விவசாயிகளை மிகவும் முட்டாள்கள் என அரசு நினைக்கிறதா? ப சிதம்பரம்
சென்னை: தனியாரிடம் விற்கப்படும் விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவு (எம்.எஸ்.பி) விலையை வேளாண் அமைச்சரால் உறுதிப்படுத்த முடிந்தால், அவர் ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
விவசாயிகள் சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்யசபால் கடும் எதிரப்பு மற்றும் கூச்சல்களுக்கு மத்தியல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால் இந்த மசோதா சட்டமாக அமல்படுத்துவதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த மசோதாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பாஜகவின் நட்பு கட்சிகளா சிரோன்மணி அகாலிதளம், அதிமுக உள்ளிட்டவை கடுமையாக எதிரத்துள்ளன, அவர்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், விவசாயிகள் விலைவிக்கும் அத்தியாவசிய விளைபொருட்களுக்கு இதுவரை குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்து வந்தது.
ஆவேசமான எம்பிக்கள்.. இன்று ராஜ்யசபாவில் என்ன நடந்து... அரசு எடுக்கப் போகும் அதிரடி ஆக்ஷன்!
தனியார் முதலீடு
ஆனால் அதற்கு இனி வாய்ப்பு இல்லை. அத்துடன் அவர்கள் எங்கு வேண்டுமானலும் விற்கலாம் என்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. சந்தையின் விற்று வந்த விவசாயிகளிடம் கார்ப்பரேட்டுக்கள் வாங்கி செல்லும் வகையில் மசோதா அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சட்டத்தில் இல்லையே
எனினும் மத்திய அரசு விவசாயிக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. அத்துடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு ரத்து செய்யப்படாது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் இதை சட்டமாக்காதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
ப சிதம்பரம்
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம், விவசாயிக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார். தனியார் வர்த்தகம் இன்றும் நடைபெறுகிறது. விவசாயிக்கு செலுத்தப்படும் விலை, குறைந்த பட்ச ஆதரவு விட குறைவாகவே உள்ளது. குறைந்த பட்ச ஆதரவு (எம்.எஸ்.பி) விலையை வேளாண் அமைச்சரால் உறுதிப்படுத்த முடிந்தால், அவர் ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை?
என்ன உத்தரவாதம்
எந்த விவசாயி தனது விளைபொருட்களை எந்த வர்த்தகருக்கு விற்றார் என்பதை அமைச்சருக்கு எப்படித் தெரியும்? நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை அவர் எவ்வாறு அறிந்து கொள்வார்? அவரிடம் தரவு இல்லையென்றால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை அவர் எவ்வாறு உத்தரவாதம் செய்வார்?
வெற்று வாக்குறுதி
அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா? ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றியதா?" என்று சரமாரியாக ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.