370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும்.. காஷ்மீர் தலைவர்கள் கோரிக்கைக்கு ப. சிதம்பரம் ஆதரவு
சென்னை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோரை சிறையில் அடைத்தது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான் ஊழல் அதிமுக அரசுக்கு பாதுகாவலன்: மு.க.ஸ்டாலின்
காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள்
இவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் பல மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மெகபூபா முப்தி 14 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் அரசால் விடுவிக்கப்பட்டனர். இதன் பின்னர் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
உதயமானது மக்கள் கூட்டணி
காஷ்மீருக்கான 370வது பிரிவை மீண்டும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை அம்மாநில பாஜக அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்கிற அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குலாம்நபி ஆசாத் பங்கேற்கவில்லை
ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் குலாம்நபி ஆசாத் பங்கேற்கவில்லை. இது ஒரு சர்ச்சையாகவும் விவாதிக்கப்பட்டது. ஆனால் குலாம்நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவரால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
காங். நிலைப்பாடு- ப. சிதம்பரம்
இதனிடையே ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் 370வது பிரிவை ரத்து செய்த மோடி அரசின் முடிவு ஒருதலைபட்சமானது என்றும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சிதம்பரம் அந்த பதிவில் கூறியுள்ளார்.