சீன துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி 7 வாரம் ஆகியும் பிரதமர் அமைதியாக இருந்தது ஏன்?: ப.சி.
சென்னை: லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் உயிரிழந்தது எத்தனை வீரர்கள்? என்கிற விவரத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏன் அறிவிக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர்.
ராணுவ வீரர் பழனியின் வீர மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?
சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை
இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா? இவ்வாறு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.