என்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி
Recommended Video
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குக்காக ப சிதம்பரத்தை 2மணி நேரத்தில ஆஜராக வேண்டும் என்று வர சொன்னீர்களே.. என்ன சட்டத்தில் விசாரிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடவே இல்லையே என சிபிஐக்கு ப சிதம்பரத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் ப .சிதம்பரம். கடந்த 2007ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதில் அனுமதி வழங்கியதில் 305 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு சிறை சென்ற கார்த்தி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றதால் பரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.
சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்தை கைது செய்ய முனைப்பு காட்டி வரும் நிலையில். அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் சிபிஐக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில் அவர் " எனது கட்சிக்காரரை இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட நோட்டீஸ் அறிவிப்பில் எந்த சட்ட விதிகள் என்பதை குறிப்பிட தவறிவீட்டீர்கள்.
இந்த உத்தரவுக்கு எதிராக சிதம்பரத்தின் அவசர சிறப்பு மனு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். 10.30 மணிக்கு நடைபெற உள்ள விசாரணை வரை காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது கட்சிக்காரர் ப சிதம்பரம் சட்டத்தில் அவருக்கு உள்ள உரிமையை பய்ன்படுத்துகிறார். ஆகஸ்ட் 20ம் தேதி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் எதிர்பார்த்த முன்ஜாமின் கிடைக்காத காரணத்தால் அவசர மனுவை உச்சநீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்" என கூறியுள்ளார்.