தமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி
சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, இன்று அவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்களும், சிதம்பரம் ஆதரவாளர்களும் குவிந்து, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
பாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. நான் சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். ஆனால் நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு சுதந்திரம் இல்லையே. இப்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நமது நாடு, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய வலதுசாரி பிற்போக்கு பாசிச ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழக மக்கள், பாஜக மீது காட்டுகின்ற எச்சரிக்கை உணர்வை எப்போது இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்கிறார்களோ அப்போதுதான் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். பாஜக எதிர்ப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கும் பரவவேண்டும்.
என் மன உறுதியைக் குலைப்பதற்காகத்தான் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், என்னுடய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டுமென நினைத்தார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டால் என்னுடைய உடல்நலத்தை மீட்டெடுத்துள்ளேன்.
இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொடர்ந்து, இதைப் பற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம், பெண்களுகான கொலைக்களமாக மாறிவருகிறது. இதைத் தடுக்கவேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணும் தான் இதில் பொறுப்பாளி.
2004 - 2010 வரை 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. இடையே 9 சதவீத வளர்ச்சியை கூட எட்டியது. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது கூட அவர்கள் சொல்லும் பொய்யான புள்ளிவிபரம் தான். பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.