தீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது?
திமுக காங்கிரஸ் இடையே நடந்து வரும் வார்த்தை போரில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு அதிக பங்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சென்னை: திமுக காங்கிரஸ் இடையே நடந்து வரும் வார்த்தை போரில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு அதிக பங்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களை வென்று சாதனை படைத்த திமுக கூட்டணியில் தற்போது மாபெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.
மாறி மாறி திமுக - காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதுதான் சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டது.
என்ன சண்டை
காங்கிரஸ் திமுக இடையில் நடக்கும் சண்டையை புரிந்துகொள்ள, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய கோஷ்டிகள் இருக்கிறது. தங்கபாலு கோஷ்டி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோஷ்டி, ப. சிதம்பரம் கோஷ்டி என்று தொண்டர்கள் அணி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
மூன்று பேர்
இவர்கள் மூவருமே தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக முயன்று வருகிறார்கள். இவர்களுக்கு கீழ் நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே.எஸ் அழகிரி ,முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு நெருக்கம் ஆனவர்.
திமுக எப்படி
இந்த நிலையில்தான் கே.எஸ் அழகிரி திமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார். இவரின் அறிக்கைதான் திமுக - காங்கிரஸ் இடையே சண்டை ஏற்பட முதல் காரணமாக இருந்தது. திமுக காங்கிரஸ் இடையே நடக்கும் இந்த சண்டையில் அதிகமாக கருத்து தெரிவிப்பது ப. சிதம்பரம் தரப்புதான் என்கிறார்கள்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ப. சிதம்பரத்திற்கு நெருக்கமான சிலருக்கு உள்ளாட்சி பதவிகள் வழங்கப்படவில்லை என்று புகார் உள்ளது. இதனால் திமுக மீது ஏற்பட்ட கோபம் காரணமாகத்தான் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது.
7 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போதே ஐடி ரெய்டு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட சண்டை இது என்றும் கூறுகிறார்கள்.
ப. சிதம்பரம் எப்படி
அப்போதில் இருந்தே ப. சிதம்பரம் தரப்பிற்கும், திமுகவிற்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. ராகுல் காந்தி - ஸ்டாலின் நட்பால் மட்டும்தான் கூட்டணி நீடித்தது. தற்போது ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிடையாது. அதனால் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியில் ப. சிதம்பரம் கை ஓங்கி இருக்கிறது என்கிறார்கள்.
கே.எஸ் அழகிரி தரப்பு
கே.எஸ் அழகிரி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர்தான் திமுகவை அடுத்தடுத்து விமர்சனம் செய்வது. இவர்கள் எல்லோரும் ப. சிதம்பரம் ஆதரவாளர்கள். காங்கிரஸ் கட்சியின் மத்த கோஷ்டிகள் எதுவும் திமுகவிற்கு எதிராக பேசவில்லை. பெரும்பாலும் இந்த தொடர் வார்த்தை போர் கூட்டணி முறிவிற்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.