புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்களையும் அனுமதிக்க வேண்டும்- ப. சிதம்பரம்
சென்னை: புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்களையும் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
40 நாட்கள் லாக்டவுனால் பிற மாநிலங்களில் புலம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமைகளில் இருந்து தப்பிக்க பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடக்கின்றனர்.
இப்படி நடந்தே செல்லும் நிலையில் மாண்டு போனவர்கள் எண்ணிக்கை கணக்கிலும் இல்லை. இதனால் பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம்... மத்திய அரசு அனுமதி
இதனால் பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்கள் அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பவதற்கு மத்திய அரசு இசைந்தது. இதன் நான் வரவேற்கிறேன். இந்தக் கோரிக்கையைக் காங்கிரஸ் கட்சி இரண்டு வாரங்களாக வலியுறுத்தி வந்தது.
பஸ்களை மட்டும் அனுமதித்தால் போதாது. போதிய சுகாதார பாதுகாப்புகளுடன் ரயில்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.