வாக்காள பெருமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.. ப சிதம்பரம் வீடியோ வெளியீடு
சென்னை: வாக்காள பெருமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.. என்ற தலைப்பில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் ஊராட்சி தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
|
வீடியோ வெளியீடு
இதையொட்டி அரசியல் கட்சிதலைவர்கள் தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ப சிதம்பரம், இந்த உள்ளாட்சி தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் ஆளும் அரசு பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி நடத்தவிடாமல் செய்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
முற்றுப்புள்ளி
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தனி அதிகாரிகளை வைத்து ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள் என்று அந்த வீடியோவில் பேசியுள்ள ப சிதம்பரம், இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டுமென்றும் அதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக காங் கூட்டணி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு (திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு) ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள ப சிதம்பரம், மத்திய மற்றும் மாநில அரசின் நிதிகளை மக்களுக்கு செம்மையாக பயன்படுத்த வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வாக்களிக்கணும்
ஊராட்சி மன்றங்களில் தேர்தல் நடைபெறுவதை தனது பேச்சில் குறிப்பிட்ட ப சிதம்பரம் அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.