ஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும் இதுகுறித்து அவர் உடன் மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தவர் பி எச் பாண்டியன்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் இணைந்து செயல்பட்டவர் பி எச் பாண்டியன். அது போல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை ஏற்க மறுத்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டதும், மருத்துவமனையில் இருந்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் ராஜாஜி ஹாலுக்கு சென்றோம். அங்கே, ஜெயலலிதாவால் கட்சிவிரோத நடவடிக்கைக்காக நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் எல்லாம் சுற்றி நின்றிருந்தனர்.
சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்
சாதாரண உறுப்பினர்
இதைப் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக நீக்கியபிறகு சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சேர்ந்துவிட்டார். அந்த கடிதத்தில், தனது சொந்தக்காரர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக கூறிய சசிகலா, அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமும் இல்லை என்று கூறி, சாதாரண உறுப்பினராக வந்தவர்.
டிவியில் சொல்ல வைத்த சசி
ஆனால், ஜெயலலிதா மறைந்து 20 நாட்கள்கூட ஆகாதநிலையில், எல்லோரையும் பொது இடத்தில் பேச வைத்து, டி.வி.யில் பேட்டி கொடுக்கச் செய்து, ‘உங்களுக்கு மட்டும்தான் தகுதி, நீங்கள் ஒருவர்தான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்' என்றும் சொல்ல வைத்துள்ளார்.
காவல் துறை
அப்போதுதான் எனக்கு ஒன்று புலப்பட்டது. ஒரு பெரிய பணக்கார பெண்மணி ஒருவர் மும்பையில் இருந்து டெல்லி வரை ரயிலில் பயணம் செய்யவைத்து திட்டமிட்டு கொன்றது நினைவுக்கு வந்தது. சாதாரணமாக ஒரு வீட்டில் ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களைத்தான் காவல்துறை விசாரிக்கும்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்
சசிகலாவை விசாரிக்க வேண்டும்
அந்த வகையில், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளான, செப்டம்பர் 22-ம் தேதி, 2016 அவரது வீட்டில் எத்தனை பேர் இருந்தார்கள்? வீட்டில் இருந்த சொந்தங்கள் யார்? யார்? இதைப்பற்றி எல்லாம் விசாரிக்க வேண்டாமா?
சிறை சென்ற சசி
தமிழகத்தில் கடந்த 2 நாளில் நடந்த நிகழ்வுகள் என் மவுனத்தை கலையச் செய்துவிட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கும் முதல்வர் பதவிக்கும் சசிகலா தகுதி அற்றவர் என பி எச் பாண்டியன் முழங்கினார். அவர் விரும்பியது போல் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாமல் சிறை சென்றார்.
புதிய பதவிகள்
பொதுச் செயலாளர் பதவியும் அதிமுகவின் இரு அணிகள் இணைந்த போது நடந்த செயற்குழு கூட்டத்தில் நீக்கப்பட்டு புதிய பதவிகளான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனது கருத்துகளை உரக்க சொன்ன பி எச் பாண்டியன் இன்று காலை இயற்கை எய்தினார்.