4 மணிக்கு நாங்க ஊருக்கு போகனும்... 2 மணிக்கு விட்டுருங்க - பி.ஆர்.பாண்டியன்
சென்னை: சத்தீஷ்கர் மாநிலத்தை போல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி கோட்டை நோக்கி முற்றுகைப்பேரணி நடத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது 3.45 மணி பல்லவன் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால், 2.00 மணிக்கு தங்களை விடுவித்து விடுமாறு கூறியுள்ளார் பி.ஆர்.பாண்டியன்.
இதைக்கேட்டு சிரித்த போலீஸார், பிறகு எதற்கு சிறைக்கு அனுப்பினாலும் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் எங்களிடம் ஆவேசம் காட்டினீர்கள் என பாண்டியனிடம் வினவினர்.
கைது
சென்னை சேப்பாக்கத்தில் திமுக ஒரு புறம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றொருபுறம் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களை கைது செய்த போலீஸ் எழிலகம் வளாகத்திற்கு அழைத்துச் சென்றது.
கோரிக்கை மனு
முதல்வரை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, வேளாண்மைத்துறை அமைச்சர் அல்லது செயலாளரையாவது சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என விவசாயிகள் போலீஸிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி, பிறகு வேளாண்மைத்துறைச் செயலாளர் எழிலகம் வளாகத்திற்கே வந்துவிட்டார். அப்போது அவரிடம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4 மணிக்கு ரயில்
காலை 11.00 மணியளவில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை மாலை 6 மணிக்கு விடுவிக்க போலீஸ் திட்டமிட்டது. ஆனால், தங்களை 2 மணிக்கே விட்டுவிட வேண்டும் என்றும், 3.45 மணிக்கு பல்லவன் ரயிலில் ஊருக்கு போக டிக்கெட் முன் பதிவு செய்துள்ளோம் என்றும் பி.ஆர். பாண்டியனுன் வந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
போலீஸ் சிரிப்பு
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 2 மணிக்கு விடுவிக்க ஒப்புக்கொண்ட போலீஸ், முன்னதாக சிறைக்கு செல்வோம், சிறையை நிரப்புவோம் என்றெல்லாம் ஏன் கூறுனீர்கள் என வினவியது. அதற்கு பதில் அளித்த விவசாய சங்க பிரதிநிதி ஒருவர், அதெல்லாம் கோபத்தில் கூறியது எனக் கூற அந்த இடமே கலகலப்பானது.