பா. ரஞ்சித் கூறிய கருத்துக்கு வரலாற்று சான்று உள்ளதா?... அமைச்சர் பாண்டியராஜன் பதில்
சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் கூறிய கருத்துக்கு, வரலாற்று சான்று உள்ளதா என ஆராய வேண்டும் என தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.
தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன.
தமிழகத்தில் நாசவேலைக்கு சதி?.. புழல் சிறையில் 3 முக்கிய தீவிரவாதிகளிடம் விசாரணை
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் ஜாமின் மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் எளிமையான முறையில், கணிதம் பயிற்றுவிக்கும் தனியார் அமைப்பின் துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித் கூறிய கருத்துகள் பற்றி, தொல்லியல், இலக்கியம் ரீதியாக என்ன சான்று இருக்கிறது என்பதை, ஆய்வு செய்திட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், பட்டியலின மக்களின் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதும், தமிழக அரசின் முக்கியமான குறிக்கோள் எனவும் குறிப்பிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற முகமது யூசஃப், தமிழில் விருதை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை வரவேற்பதாக கூறிய அவர், ஒரு கவிஞர் அல்லது படைப்பாளி எந்த மொழியில் பரிசு பெற்றாரோ, அதே மொழி எழுத்துகளை கொண்டு விருது கொடுக்க வேண்டும் என்ற கருத்தை, தமிழக அரசும் வலியுறுத்தும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.