ஜெயலலிதாவின் பள்ளி தோழி பதர் சயத் காங்கிரஸில் இணைந்தார்
சென்னை: ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும் முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வழக்கறிஞரான பதர் சயீத், கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி தோழியாவார். கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த பதர் சயீத் பின்னர் மீண்டும் வக்பு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றார். மூத்த வழக்கறிஞரான பதர் சயீத் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கடந்த 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இணை செயலாளர்
கடந்த முறை அதிமுக ஆட்சிக் காலத்தில் பதர் சயீத் வக்பு வாரியத் தலைவர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
வாய்ப்பில்லை
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, பதர்சயீத்துக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிமுகவிலிருந்து விலகல்
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பமனு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விலகிய அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸில் இணைந்தார்
இவர் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய பதர் சயீத் இன்று காங்கிரஸில் இணைந்தார்.
புதிய பதவி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக பதர் சயீத் நியமனம் செய்யப்பட்டார்.