அமெரிக்காவை அசரவைத்த தமிழர்கள்.. பத்மஸ்ரீ விருதுபெறும் வடிவேல் கோபால், மாசி சடையன்.. யார் இவர்கள்?
சென்னை: தமிழ்நாட்டின் இருளர் இனத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகிய இருவருக்கும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் யார் என்பது பற்றி பார்க்கலாம்.
15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீடுகளில் பாம்பு நுழைந்து விட்டாலோ அல்லது பாம்பின் இருப்பை உணர்ந்தாலோ அவற்றை லாகவமாகப் பிடிக்க இருளர் இன மக்களை அழைப்பார்கள். இரு ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் கூட இருளர்கள் பாம்பு பிடிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் இன்று பாம்பு பிடிக்கும் சூழல் மாறியிருக்கிறது. பெரும்பாலும் வனத்துறையினர் அல்லது அவர்களுடன் தன்னார்வலர்கள் பங்கெடுக்கிறார்கள். ஆனால் அனைவரும் பாம்புகளைக் கையாள்வது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் மீட்புக் கருவிகளையும் அணுகுமுறைகளையும் மட்டுமே தெரிந்து வைத்திருப்பது கைகொடுக்காது.
பத்ம பூஷண் விருதுபெறும் வாணி ஜெயராம்.. தமிழகத்தின் வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது!
இருளர்கள்
பாம்புகளை மீட்கும் இடத்தின் புறச்சூழல், பாம்பின் இயல்பு, அங்கு வசிக்கும் மக்களின் மனநிலை போன்றவற்றை அறிவது மிக அவசியம். இவற்றுடன் தைரியம், குழப்பம் இல்லாமல் இருத்தல், பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. அப்படி பொறுமையை கடைப்பிடித்து பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் தான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்த வடிவேல் கோபாலும், மாசி சடையனும்.
மலைப்பாம்புகள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணித்து எண்ணிலடங்காத பாம்புகளை வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் பிடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் இருவரின் புகழ், அமெரிக்கா வரை சென்றது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிகளவிலான பைத்தான் வகை மலைப்பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வகை மலைப்பாம்புகளால், ஃப்லோரிடா மாகாணத்தில் வாழும் மக்கள் ஏராளமானோர் அச்சத்திலேயே இருந்துள்ளனர்.
பைத்தான் சேலஞ்ச்
மக்களின் அச்சத்தை போக்க, பைத்தான் பாம்புகளை பிடிக்க அமெரிக்கா முடிவு செய்தது. அப்போது பைத்தான் சேலஞ்ச் என்ற சிறப்பு குழு அமைத்து உலகம் முழுவதும் ஆயிரம் பாம்பு பிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறுதியில் வெறும் 200 பைத்தான்கள் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் இருளர்களை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்கா நிர்வாகம், வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனிடம் வந்து சேர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இருளர்கள்
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா பறந்த இருவரும், அடுத்த 10 நாட்களில் மட்டும் 14 பைத்தான்களை பிடித்து அமெரிக்காவுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளனர். இவர்களின் திறமையை கண்டு மிரண்ட ஃப்ளோரிடா மாகாணத்தின் வன உயிரின அமைச்சக நிர்வாகிகள், பாம்பு பிடிக்கும் யுக்திகளையும், வியூகங்களையும் தங்கங்களுக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருது
அமெரிக்கா மட்டுமல்லாமல் தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கும் பாம்பி பிடிப்பதற்காக இருவரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.