பாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா?.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்!
Recommended Video
சென்னை: சாரலின் ஈரம் காயவே நெடுநேரம் எடுக்கும் நிலையில், சுனாமியின் சுவடுகள் கரைய, மறைய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.
இந்த அளவுகோலைத்தான் காஷ்மீர் விஷயத்திலும் பயன்படுத்திட வேண்டும். சாதாரணமாக அம்மாநிலத்தில் கலவரம் நேர்ந்தாலே கூட அது ஒரு வார காலமாவது தேசமெங்கிலும் ஏதோ ஒரு வகையில் பேசப்பட்டுக் கொண்டும், விவாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்.
ஆனால், காஷ்மீரின் தலையெழுத்தையே திருப்பிப் போட்ட ஒரு செயலை மோடியும், அமித்ஷாவும் ஜஸ்ட் லைக் தட் ஆக செய்து முடித்துள்ளனர். இது இன்னும் கணிசமான காலத்துக்கு கதைக்கப்படும் கருவாக மாறி நிற்கிறது.
நல்ல விஷயம்தான்
இந்த தடாலடி பற்றி அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்? என்பதை விட, அரசியல் மற்றும் பதவி பரிபாலனங்களுக்கு வெளியே நிற்கும் வல்லுநர்களின் கருத்து என்ன? என்பதே முக்கியம். அந்த வகையில், சென்னையை சேர்ந்த குருநானக் கல்லூரியின் போர்தந்திர துறை பேராசிரியரான நெடுஞ்செழியன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
மாற்றுப் பாதைக்கு வழி வகுக்கும்
"மத்திய அரசு இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவானது, காஷ்மீரை மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அன்று ராஜா ஹரி சிங் எடுக்கத் தவறிய முடிவுகளுக்கான விளைவே காஷ்மீர் விவகாரங்கள். சுதந்திர இந்தியாவில் காஷ்மீரை சேர்க்கும் அவசரத்தில், அப்போதைய பிரதமர் நேரு, அங்கிருந்த முஸ்லீம் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எடுத்த முடிவுதான் சட்டப் பிரிவு 370. இதன் மூலம் எந்த விதமான நன்மையும் அந்த மக்களுக்கு கிடைக்கவேயில்லை. பின் அங்கிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதும் காஷ்மீரில் நிலையற்ற அரசியல் சூழல் உருவாக காரணமாகின.
கோபத்தில் பாகிஸ்தான்
சர்வதேச எல்லைப் பிரச்னைகளைக் கொண்ட காஷ்மீரை, இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியளிக்காது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியோர் இந்திய அரசுக்கு ஆதரவு தந்துள்ளன. நம்முடனான சந்தை, கடல் வழிக்காக சீனா எதிர்க்காது.
போருக்கு வாய்ப்பில்லை
அப்படியானால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான், கோபத்தில் இந்தியா மீது போர் தொடுக்குமா? என்று கேட்டால்....இல்லை! பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் ராணுவ நிலை பலமற்றதாகவே இருக்கிறது. எனவே நம் நாட்டுக்கு நிச்சயமாக பாகிஸ்தானால் போர் அச்சுறுத்தல் இல்லை. இனி பிரிவினைவாத அரசியலானது ஜம்மு - காஷ்மீரில் செல்லுபடியாகாது. இதனாலேயே அரசியல் எதிர்க்கட்சிகள் பலவும் இந்த முடிவை எதிர்க்கின்றன.
புது ரத்தம்
மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கும் வகையிலான அமைதியான சூழல் அங்கில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்றும் சுமார் எழுபது ஆண்டுகளாகியும், காஷ்மீர் முன்னேற்றம் காணாமல் பின் தங்கியே இருக்கிறது. தேக்க நிலையில் உள்ள அந்த மாநிலத்துக்கான புத்துணர்ச்சி, புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது இப்போது." என்றிருக்கிறார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்ப்போருக்கு கசப்பு மருந்தாகவும், அதை ஆதரிப்போருக்கு இனிக்கும் பாயசமாகவும் இந்த கருத்து அமைந்துள்ளது!
- ஜி.தாமிரா