10 சீட்டுக்கெல்லாம் தொங்குவது காங்.க்கு அழகில்லை.. தூக்கி போட்டுட்டு வாங்க.. பழ கருப்பையா அழைப்பு
சென்னை: 10 சீட்டு, 15 சீட்டுக்கு தொங்குவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல என்றும் திமுகவை தூக்கிப் போட்டுட்டு வாங்க என மக்கள் நீதி மய்யத்தில் அண்மையில் இணைந்த பழ கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை பழ கருப்பையா சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஜெயிக்க போவதில்லை. இப்போது தோற்பதில் ஒன்றும் குடி முழுகி போய்விடாது.
யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் நல்ல கட்சியாகும். மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும்.
பாஜகவின் பி டீம்
பாஜகவின் பி டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை கூறும் திமுகதான் பாஜகவின் பி டீம் ஆகும். ஊழலை ஒழிக்க வேண்டும். மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்களே என குறை கூறும் கிளைக் கட்சிகள் தலைமை கட்சியிடம் பணம் பெற்றுக் கொண்டு ஊழலுக்கு துணை போகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை
10 சீட்டு, 15 சீட்டுக்கு தொங்குவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல என்றும் திமுகவை தூக்கிப் போட்டுட்டு வாருங்கள். மே மாதம் தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவோம் என்றால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியதுதானே? மத்தியில் ஆள்பவர்கள் எல்லா இடங்களுக்கும் பணம் அனுப்பி விட்டார்கள் என்றார் பழ சுப்பையா. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளை கேட்கிறது.
30 தொகுதிகள்
ஆனால் திமுகவோ 20 முதல் 24 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என பிடிவாதம் பிடிக்கிறது. 30 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதனால் திமுகவுடன் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள். இதுதான் இறுதி கட்ட பேச்சுவார்த்தையாக இருக்கும் என தெரிகிறது.
திமுக கூட்டணி
காங்கிரஸின் கோரிக்கை ஏற்கப்பட்டால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும். இல்லாவிட்டால் அக்கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையும் என தெரிகிறது. அதற்கேற்ப பழ கருப்பையாவும் அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்குமா இல்லை நிராகரிக்குமா என்பது திமுக கையில்தான் உள்ளது.