நான் திமுகவில் இருந்து விலகுகிறேன்... ஸ்டாலினை நேரில் சந்தித்து குட்பை சொன்ன பழ. கருப்பையா
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தாம் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா.
ஆரம்பத்திலிருந்தே காமராஜரின் ஆதரவாளராக, காங்கிரஸ் அனுதாபியாக, திரைப்பட தயாரிப்பாளராக இருந்த பழ கருப்பையா, நல்ல பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டார். தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் நடுப்பக்க கட்டுரைகளை தீட்டினார்.
அரசியலில் இணையாமல் இருந்த பழ கருப்பையாவை கடந்த 2010-ஆம் ஆண்டு ஜெயலலிதா அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நீக்கினார்
அவரும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ஆளும் அதிமுக அமைச்சர்கள் குறித்து விமர்சித்து பேசியிருந்தார் கருப்பையா. இதையடுத்து அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.
திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல்- கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!
அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு
இதற்கடுத்த நாள் அவர் துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரது வீடு மற்றும் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பழ கருப்பையா அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு என்றார்.
ரூ 300 தந்து கூட்டத்துக்கு அழைப்பு
பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். வெட்ட வெயிலில் ஜெயலலிதா நடத்தும் பொதுக் கூட்டங்களை விமர்சித்தும் கூட்டங்களில் வருவோருக்கு பிரியாணியும் தலைக்கு ரூ 300 தருவதாகவும் இதற்காகவே மாவட்டச் செயலாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
இடம் தர மறுப்பது
இந்த நிலையில் சற்று ஒதுங்கியிருந்த அவர் திமுகவில் அதே ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி இணைந்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில், தனி இடம் தர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
விலகிய கருப்பையா
இதையடுத்து பல்வேறு பேட்டிகளில் ரஜினி, கமலை ஆதரித்து அவர் பேசியிருந்தார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் திமுகவிலிருந்தும் விலகியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் பழ. கருப்பையா.
தயாரிப்பாளர்
76 வயதாகும் பழ கருப்பையா, பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, கருணாநிதி என்ன கடவுளா உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் அங்காடி தெரு, சர்கார், நாடி துடிக்குதடி, ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமாவார்.