தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
எழுத்தாளர், நடிகர், அரசியல்வாதி என பல முகங்கள் கொண்ட முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா புதிய கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதல்வராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா புதிய கட்சியை துவங்கி உள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக அவர் அறிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்சியின் கொடி, கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா. எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். அதிமுக, திமுகவில் செயல்பட்டு வந்த இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டார்.
சமீபகாலமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் செயல்படாமல் இருந்தது. இதுபற்றி கேட்டபோது நான் கட்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் பழ கருப்பையா இருந்தார்.
கேட்டுச்சா.. பழ. கருப்பையா என்ன கேட்கிறார் பார்த்தீங்களா.. சடாரென திரும்பி பார்க்கும் பாஜக.. சரவெடி
பழ கருப்பையாவின் புதிய கட்சி
இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பல கருப்பையா பேட்டியளித்தார். அப்போது அவர் புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். இதுபற்றி பழகருப்பையா கூறியதாவது:
கட்சி மாநாடு
தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்க உள்ளேன். இதற்கான மாநாடு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். கட்சியின் கொள்கை, நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கட்சி கொடி என்ன?
கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும். தற்போது பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை பணம் கொடுத்து கலைப்பதாகவும், திருடன் கொள்ளையடித்த பொருளை அதே இடத்தில் வைத்து விட்டால் தண்டனைக்கு தப்பிக்கலாம் என்பது போல் அவர் நடந்து கொண்டுள்ளார்.
பாஜக, திமுகவுக்கு எதிர்ப்பு
ஹிந்து என்றது விந்திய மாலைக்கு அப்பாற்பட்டு இருந்த இடத்திலிருந்து வந்தது. தமிழர்களுடைய கலாச்சாரம் வேறு, பண்பாடு வேறு. இங்கு சிறு தெய்வம், குலதெய்வம் வழிபாடு தான். மதத்தின் பெயரை வைத்து பாஜக பிரித்தால், அது சூழ்ச்சியில் ஈடுபடுவதாகும். நான் பாஜக, திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி துவங்கி உள்ளேன். திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன'' என்றார்.
திரைப்படங்களில் நடிப்பு
பழ கருப்பையா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்காடித்தெரு படத்தில் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கவனத்தையும் பெற்றார். அதன்பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக வில்லன் கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார். இதுதவிர மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.