பயணங்கள் முடிவதில்லை.. ”பல” கருப்பையா சொன்னது சத்தியமான உண்மை.. நமது அம்மா கடும் தாக்கு
சென்னை : காங்கிரஸ், ஜனதா, மதிமுக, அதிமுக, திமுக என பயணங்கள் முடிவதில்லை என்னும் கதையாய், கட்சி எல்லாவற்றுக்கும் போய் வந்துவிட்ட "பல" கருப்பையா தன் பொதுவாழ்வின் நீண்ட அனுபவத்தின் மூலம் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதை தாமதமாக கண்டுபிடித்திருந்தாலும், அது சத்தியமான உண்மை என நமது அம்மா விமர்சித்துள்ளது.
திமுகவில் இருந்துவிலகி பழ கருப்பையா, அந்த கட்சியை ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும், சோப்புகளை விளம்பரம் வெளியிடுவது போல், கட்சிக்கும் கட்சியின் தலைவரை முன்னிறுத்தவும் விளம்பரங்கள் வெளியிடுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பழ கருப்பையா விமர்சனத்தை குறிப்பிட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' திமுகவை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது.
உணர்ந்து கொண்டார்
அந்த கட்டுரையில் 'திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்கிறாரே அக்கட்சியிலிருந்து விலகிய பழ.கருப்பையா.. இதைத்தானே ஜெயலலிதா தொடங்கி எடப்பாடியார் வரை எல்லாருமே எடுத்துச்சொன்னார்கள். ஆனால் இதனை உள்ளே போய் நான் உணர்ந்து கொண்டு வெளியே வருவேன் என்றால் அதற்கு நாம் என்ன செய்வது?
கருணாநிதி என்ன கடவுளா
கருணாநிதி என்ன கடவுளா என்று புத்தகம் போட்டவரை திமுகவினர் வீடு புகுந்து அன்று அடித்து துவைத்த வேளையில் அவருக்கு திமுகவே உறுதுணையாய் நின்று உளவியல் ரீதியாக ஒத்தட தைரியம் கொடுத்து கூடவே துறைமுகத்தில் நிற்கவைத்து சட்டமன்ற உறுப்பினராக்கி பழ கருப்பையாவை பைந்தமிழ் புலவர் என்று ஆராதனை செய்தது அதிமுகதான்.
திமுகவில் அடைக்கலம்
ஆனால் கொடுத்த வாய்ப்புகளின் மாண்பு அறியாது நன்றி என்ற சொல்லையே அறியாதவராக உயர்த்தி பிடித்த கழகத்தை இழித்தும் பழித்தும் பேசிவிட்டு அடித்து உதைத்த கட்சிக்கு ஆலாபனை பாட திமுகவில் அடைக்கலமான பழ கருப்பையா இப்போது போன வேகத்தில் ஏராள காயங்களை இதயத்தில் சுமந்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார்.
கார்ப்பரேட் கம்பனி
ஏற்கனவே காங்கிரஸ், ஜனதா, மதிமுக, அதிமுக, திமுக என பயணங்கள் முடிவதில்லை என்னும் கதையாய், கட்சி எல்லாவற்றுக்கும் போய் வந்துவிட்ட "பல" கருப்பையா தன் பொதுவாழ்வின் நீண்ட அனுபவத்தின் மூலம் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதை தாமதமாக கண்டுபிடித்திருந்தாலும், அது சத்தியமான உண்மை.
காயங்கள்
அது சரி திமுக அவருக்கு தந்ததெல்லாம் காயங்கள். ஆனால அதிமுக அவருக்கு இன்றுவரை வழங்கி கொண்டிருப்பது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஓய்வூதியம். இப்போது அவரது மனசாட்சிக்கு புரிந்திருக்கும் அதிமுகவின் உன்னதம்" இவ்வாறு அந்த கட்டுரையில் நமது அம்மா நாளேடு விமர்சித்துள்ளது.