பழனி முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை ஒலிக்க வேண்டும்..பெ.மணியரசன் வலியுறுத்தல்
சென்னை:தமிழ்க் கடவுள் பழனி முருகன் குடமுழுக்கில் கருவறை வேள்விச்சாலை கோபுரக்கலசம் அனைத்திலும் தமிழ் அர்ச்சனை ஒலிக்க வேண்டும் எனவும் இதனை வலியுறுத்தி நாளை உறுதியாக ஆர்பாட்டம் நடைபெறும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் வரும் 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்துக்கு கருத்து கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்க் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடைபெறும் என்று, ஆட்சியாளர்கள் பொத்தாம் பொதுவாகக் கூறி வருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் தொடுத்த வழக்கில், இன்று தமிழ்நாடு அரசு சார்பில், இரு நீதிபதிகள் முன்னிலையில் தமிழ் அர்ச்சனை நடைபெறும் என்று உறுதி கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
கோயில் கருவறை வேள்விச்சாலை கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும் சமற்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்ற உறுதி நேரடியாக அரசு சார்பில் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இருமொழிகளிலும் சம அளவில் மந்திரங்கள் ஓதி, குடமுழுக்கு நடத்தியது குறித்து அறிக்கை அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தி, நீதிபதிகள் வழக்கை 30.01.2023க்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
ஏற்கெனவே, மதுரை உயர் நீதிமன்றம் தமிழ் சமற்கிருதம் இரண்டிலும் சம அளவிற்கு மந்திரம் சொல்லி, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வழக்கிலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு வழக்கிலும் அளித்த தீர்ப்பினை முழு அளவில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என்பது நாடறிந்த செய்தி. கோபுரக் கலசத்தில் மட்டும் ஒரு ஓதுவாரை வைத்து தமிழ் மந்திரம் ஒலிக்கச் செய்தனர்.
அதன்பிறகு, மற்றக் கோயில்களிலும் குறிப்பாக 23.01.2022 அன்று நடந்த சென்னை வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கிலும் கருவறை வேள்விச்சாலை கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழுக்கு சிறு இடம் கூட கொடுக்கவில்லை. அது ஆகமப்படி நடந்தது என்று அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
எனவே, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தமிழ்க் குடமுழுக்கு குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி உண்மையாகவே செயல்படுத்தப்படும் என்பதற்கான சான்றுகள் ஏதுமில்லை! ஆகவே, தமிழ்க் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு சரிபாதி தமிழில் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை 20ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, பழனி பேருந்து நிலையம் அருகிலுள்ள மயில் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் உறுதியாக நடைபெறும் என்று பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.