கொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை
சென்னை: பல்லாவரம் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பவானி நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (25). சென்னையில் உள்ள பிரபல கம்பனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவருக்கு வேலை பறிபோனதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
வீட்டில் தனியே இருந்த 62 வயது தனலட்சுமி.. நோட்டமிட்டு புகுந்த மர்ம ஆசாமிகள்.. கோவையில் பரிதாபம்!
மனஉளைச்சல்
மேலும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த, தனது தந்தையிடம் பணம் கேட்டபோது, அவரும் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்த கொடுத்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல், சமீப நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
சந்தேகம்
இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், மகேஷ்குமார் அறையில் சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மருத்துவமனை
இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மகேஷ்குமார் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.