பேனர் துயரம்.. கட்சிகள் திருந்தாது.. தேவை நிரந்தர தடை.. கடிவாளத்தை கையில் எடுக்குமா கோர்ட்?
Recommended Video
சென்னை: சுபஸ்ரீ இறந்த வழக்கில் நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய உடன்அனைத்து கட்சி தலைமைகளும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளன.
ஆனால் உண்மையில் சில காலம் தான் இந்த உத்தரவுகள் மதிக்கப்படும் பின்னர் பழைய குருடி கதவை திறடி என்றபாணியில் மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். எனவே பேனர் வைப்பதற்கு நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும். அதை கோர்ட் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று உயர்நீதிமன்றம் விவாகரத்து தவிர கல்யாணம் காதுகுத்து , கிடா வெட்டு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டதாக கருத்து தெரிவித்து இருந்தது. இது உண்மை தான் எதற்கு எடுத்தாலும் பேனர் வைப்பது என்பது தமிழகத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிகிடக்கிறது. அதுவும் திருமண வாழ்த்து தொடங்கி கண்ணீர் அஞ்சலி வரை அனைத்து பேனர்களையும் சர்வ சாதாரணமாக இன்று சாலைகளில் காண முடியும்.

கடமை முடிந்தது
குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் வருகையின் போது மிகஅதிக அளவில் வாழ்த்து பேனர்களை காண முடியும். அப்படி வைக்கப்பட்ட ஒரு பேனரால் தான் சுபஸ்ரீ உயிரிழந்தார். உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய உடன் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என்று கட்சிகள் அறிக்கைவிட்டு தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன.

அதிகாரிகள் தடுப்பதில்லை
ஆனால் மீண்டும் பேனர்கள் வைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சட்ட விரோத பேனர்களை தடுப்பதற்கு போதிய சட்டங்கள் இருந்தாலும் உயர்நீதிமன்றம் கேட்டது போல் அந்த பேனர்களில் உள்ள வண்ணங்கள் அதிகாரிகளை தடுக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போது சுபஸ்ரீ சாவு
பேனர் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளம்பரம் செய்து கொள்ளும் சிறந்த கருவியாக மாறிக்கிடக்கிறது. இப்படி விளம்பரத்தை விரும்பியவர்களால் தான் கோவையில் கடந்த ஆண்டு ரகு என்பவரும் இப்போது சுபஸ்ரீயும் உயிரிழந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க முடியவில்லை
சட்ட விரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவிலலை என்பதே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இப்போதைக்கு பிரச்னை குறைவதற்காக பெயரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆனால் உண்மையில் சரியான நடவடிக்கை என்பது பேனர் வைப்பதற்கே நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.
கட்சிகள் எப்போதுமே திருந்தாது.. கோர்ட்தான் கடிவாளத்தை கையில் எடுக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications