ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு..!
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனையை தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பனை சார்ந்த பொருட்களை அடுத்த தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்ல தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் குமரி அனந்தனும் ஒருவர்.
பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு கோரிக்கை விடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்டாலினை பாராட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
''கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித இரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற B 3 யும், அஸ்கார்பிக் ஆசிட் என்ற C வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித உடல் வளர்ச்சிக்கு மிக தேவையானவை. நியாயவிலை கடை, ரேஷன் ஷாப் மூலம் இவை எல்லா மக்களையும் சென்றடைந்து விடும்.
இதேபோல் வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றிற்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கிச்செல்லும் செயல்களாகும்.
இளைஞருடன் எஸ்கேப் ஆன தொழிலதிபர் மனைவி.. டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றி வளைப்பு..குமரி பரபரப்பு
தமிழ்த்தறி என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊர்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற, பாரம்பரிய பட்டுச்சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன்.
இந்த முயற்சிகளை தமிழக முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சையம் உயர்நிலைக்கு செல்கிற வாய்ப்பு ஏற்படும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வரை வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு குமரி அனந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.