50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்... கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்
சென்னை: சென்னை-மதுரை ஆகிய இருபெரும் நகரங்களை ஒரே இரவில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட பாண்டியன் ரயில் சேவை நேற்றுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
1969-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மதுரை-சென்னை, சென்னை-மதுரை ஆகிய இரு வழித்தடங்களில் பாண்டியன் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக ரயிலுக்கு ஒரு மன்னர் பெயர் சூட்டப்பட்டதும் இந்த ரயிலுக்கு தான். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனை பெருமைப்படுத்தும் வகையில் பாண்டியன் ரயில் என பெயரிடப்பட்டது.
நீராவி எஞ்சின்
தொடக்கக்காலத்தில் பாண்டியன் விரைவு ரயிலாக இயக்கப்படவில்லை. மீட்டர்கேஜ் பாதையாக இருந்ததால் இயல்பான வேகத்திலேயே அந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் ஆரம்பத்தில் இரண்டு நீராவி எஞ்சின்களை கொண்டு, இயக்கப்பட்ட பாண்டியன் ரயிலில் இரண்டு முதல் வகுப்பு பெட்டிகளும், 8 முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகளும், பார்சல் பொருட்களுக்காக ஒரு பெட்டியும் மட்டுமே இருந்தன.
காலத்தின் தேவை
நாளடைவில் காலத்தின் தேவைக்கருதி படிப்படியாக தன்னை உருமாற்றி நவீனமாக்கி கொண்டது பாண்டியன் ரயில். 1985-ம் ஆண்டு தான் பாண்டியன் ரயிலில் ஏ.சி.கோச்கள் இணைக்கப்பட்டன. ஒரு முதல் வகுப்பு ஏ.சி.பெட்டியும், தலா இரண்டு டூ-டைர், திரீ டைர் ஏசி பெட்டிகளும் சேர்க்கப்பட்டன. 1998-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பிராட் கேஜாக மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து 2002-ம் ஆண்டு பாண்டியன் அதிவிரைவு ரயிலாக(super fast express) மாற்றப்பட்டது
குடும்ப உறுப்பினர்
தென்மாவட்ட மக்களின் அதுவும் குறிப்பாக மதுரை மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்த ஒரு ரயில் என்று பாண்டியனை கூறலாம். அந்தளவுக்கு பாண்டியன் ரயிலை குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் மதுரை மக்கள் போற்றி வருகின்றனர். பணி நிமித்தமாகவோ, விஷேசங்களில் கலந்துகொள்வதற்கோ மதுரையில் இருந்து யார் சென்னை வந்தாலும், அவர்களின் முதல் தேடுதல் பாண்டியன்ல இடமிருக்கா என்பது தான்.
காலம் தவறாமை
பாண்டியன் ரயிலை வி.ஐ.பி.க்கள் ரயில் என செல்லமாக அழைக்கப்படுவதும் உண்டு. இன்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள், என பல்வேறு தரப்பினரும் சென்னைக்கு வருவதற்கு பாண்டியன் ரயிலை தான் முதல் தேர்வாக வைத்துள்ளனர். காரணம், பாண்டியனின் காலம் தவறாமை கொள்கை. குறித்த நேரத்தில் மதுரையில் புறப்பட்டு குறித்த நேரத்தில் சென்னை எழும்பூரை வந்தடைந்துவிடும்.