தொண்டர்களால் நாங்கள்.. தொண்டர்களுக்காகவே நாங்கள்- ஜெயலலிதா பாணியை கப்பென்று பிடித்துக் கொண்ட ஓபிஎஸ்!
Recommended Video
சென்னை: தொண்டர்களால் நாங்கள், தொண்டர்களுக்காகவே நாங்கள் என ஜெயலலிதா பாணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா பொதுக் கூட்டத்திலோ பொதுக் குழுவிலோ, சட்டசபையிலோ, பிரசாரத்திலோ பேசினால் அதிகமாக கூட்டம் கூடும். ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் பேசும் போது மக்களால் நான் மக்களுக்காகவே நான் என கர்ஜிப்பார்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நாட்டு மக்கள்
அவர் கூறுகையில் வலுவான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை செய்து வருகிறோம்.
வெற்றி இருக்கு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் வெற்றி மூலம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என மக்கள் காண்பித்துவிட்டனர். தொண்டர்கள்தான் இயக்கத்தின் இதயம் போன்றவர்கள். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை.
ஒற்றுமை
தமிழ்நாட்டின் ஜீவாதாரண பிரச்சினையான காவிரி பிரச்சினையில் வெற்றி பெற்றுவிட்டோம். எய்ம்ஸ் மருத்துவமனை, 6 மருத்துவக் கல்லூரியையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
ஜெ. பாணி
உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறுவதே ஜெயலலிதாவுக்கு செய்யும் மரியாதை ஆகும். தொண்டர்களால் நாங்கள். தொண்டர்களுக்காவே நாங்கள் என ஜெயலலிதா பாணியில் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.