திடீர் திருப்பம்.. முகத்தை கர்சீப்பில் மூடி.. ரூ.18 லட்சம் ஆட்டைய போட்டது யார் தெரியுமா..பரனூர் ஷாக்
பணத்தை திருடியது ஊழியர் என்பது தெரியவந்துள்ளது
Recommended Video
செங்கல்பட்டு: டோல்கேட் ஆபீசில் வைத்திருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தை காணோம் என்று புகார் கொடுத்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக அந்த டோல்கேட் ஊழியர்களே இப்பணத்தை ஆட்டைய போட்டுள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இது சம்பந்தமாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடுபோன பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 26-ந்தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயம்பேட்டில் இருந்து நெல்லைக்கு ஒரு அரசு பஸ் சென்றது.. பரனூர் டோல்கேட்டில் பஸ் டிரைவர் நாராயணனுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட.. இந்த தகராறு மோதலாக வெடித்தது.
டிரைவரிடம் எல்லைமீறி ஊழியர்கள் பேசியதுடன் தாக்கியதாவும் தெரிகிறது. இதனால். பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை எச்சரித்தும் கண்டித்தும் அவர்கள் கேட்காததால், அரசு பஸ் ஊழியர்களும், மக்களும், சேர்ந்து டோல்கேட்டை துவம்சம் செய்து விட்டனர். டோல்கேட்டையும் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி விட்டனர். இதை பார்த்து மிரண்டு போன ஊழியர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
பணம் மாயம்
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், டோல்கேட் சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள், ஆபீசில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி உள்ளதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு புகார் தந்தார். இதன் பேரில் விசாரணை நடத்தவும் போலீசார் இறங்கினர்.. டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவின் இருந்தது.
லாக்கர்
டோல்கேட் ஆபீசுக்குள் முகத்தை மறைத்தபடி செல்லும் ஒரு இளைஞர், அங்கிருக்கும் கம்ப்யூட்டரை தூக்கி போட்டு உடைத்துவிட்டு... லாக்கரில் இருந்த பணத்தை எடுக்கிறார்.. அதை தான் கொண்டுவந்த பையில் வைத்து திணித்து கிளம்புகிறார். பணம் கொள்ளையடிக்கப்பட்டது போன்று நம்பவைக்க, அதில் இருந்த சில கட்டுப் பணத்தை அந்த ரூமுக்குள் இறைத்து சிதற விடுகிறார்.. எது எல்லாமே அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
பரபரப்பு
இந்த காட்சியை பார்த்ததும், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை என்றே கணிக்கப்பட்டது. காரணம், பணம் இருக்குமிடம் அந்த பரபரப்பில் மர்மநபருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. ஒருவேளை அந்த டோல்கேட்டில் வேலை பார்த்த நபராகக்கூட இருக்கலாம் என்றும் அப்போதே சந்தேகம் எழுந்தது. அதன்படியே சுங்கச்சாவடி ஊழியர்களே பணத்தை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அம்பலம்
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.. பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை நடந்ததுபோல சுங்கசாவடி ஊழியர்களே நாடகமாடி உள்ளதும் அம்பலமாகி உள்ளது. இப்போது ஊழியர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.. சரணடைந்துள்ள செந்தில் மற்றும் பரமசிவத்திடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடமும், இது சம்பந்தமாக டோல்கேட் ஊழியர்கள், அதிகாரிகளிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.