கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த 32 வயது குழந்தை... சூன்யமான எதிர்காலம்
சென்னை: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பெற்றோர் உயிரிழந்துவிட்ட நிலையில், 32 வயதான மன வளர்ச்சி குன்றிய இளைஞர் நிர்கதியாக நிற்கிறார்.
இவரை ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்து விட உதவும் கரங்கள் (ஹெல்பிங் ஹேண்ட்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் முன் வந்துள்ளனர்.
மனவளர்ச்சிக் குன்றிய மணி தனது பெற்றோர் இறந்துபோனதை கூட உணரமுடியாத நிலையில் உள்ளவர்.
தமிழகத்தில் மேலும் அதிமுக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா- கோவை அம்மன் அர்ச்சுனனுக்கு சிகிச்சை
கொரோனா தொற்று
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.வி.பி.கார்டனில் அருணாச்சலம்-கீதா தம்பதியினர் தங்களது மகன் மணியுடன் (மன வளர்ச்சிக் குன்றிய இளைஞர்) வசித்து வந்தனர். அருணாச்சலம் பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநில தலைவராக இருந்ததால் இந்த கொரோனா காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து பார்வையற்றோருக்காக ஏராளமான கொரோனா நிவாரண உதவிகளை செய்து வந்துள்ளார். அவர் அப்படி சென்ற இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொரோனா தொற்றிக்கொண்டதால் அவர் மூலம் மனைவி கீதா, மகன் மணிக்கும் அது தொற்றியது.
சிகிச்சை பலனில்லை
இதையடுத்து அருணாச்சலம், கீதா, மணி, ஆகிய மூவரும் கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலமும், அவரது மனைவி கீதாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது மணி மட்டும் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.
காலத்தின் கோலம்
இந்நிலையில் இனிமேற்கொண்டு மனவளர்ச்சி குன்றிய மணியை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழலில், இது தொடர்பாக பேசுவதற்கு அருணாச்சலத்தின் நண்பரும், ஹெல்பிங் ஹேண்ட் அமைப்பின் நிறுவனருமான தினேஷிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது,'' மணியை பொறுத்தவரை 32 வயது குழந்தை என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு அவரது தாய், தந்தை மரணம் அடைந்தது கூட தெரியாது, உணர முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அவரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை ஏதாவது ஒரு விடுதியில் சேர்த்து விட முடிவெடுத்துள்ளோம்.''
இன்னும் ஓரிரு நாட்களில்
''மணிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளார்கள். கொரோனா கொடூரம் இந்தளவிற்கு ஒருவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது'' என வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துகொண்டார். உதவி செய்ய போய் உயிரிழந்த பெற்றோரது ஆசியும், வாழ்த்தும் மணியை பாதுகாக்கும்.